Saturday, November 28, 2009

தளபதி பொன்னம்மான் நினைவிடத்தில் நடைபெற்ற மாவீரர் வீரவணக்க நிகழ்வு

தமிழீழத்தில் ஆயுதப்போராட்டம் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தமிழீழத்தில் சிங்கள பேரினவாதிகளின் கொடூரங்கள் அதிகரிக்க தொடங்கிய காலமான 1983 இல் தமிழீழ விடுதலைப்போராளிகளுக்கு அடைக்கலம் தந்து அனைத்து உதவிகளை புரிந்த சேலம் மாவட்ட கொளத்தூர் மக்கள் மாவீரர் நாளான 2009 நவம்பர் 27 அன்று தமிழீழ விடுதலைபோராட்டத்தில் வீரச்சாவடைந்த மாவீரர்களுகு பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் வீரவணக்கம் செலுத்தினர்.
நேற்று மாலை சரியாக 6.05 மணியளவில் கொளத்தூர் அருகில் 1983 இலிருந்து 1989 வரை விடுதலைப்புலிகள் பயிற்சி எடுத்த இடத்தில் தளபதி பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட "புலியூர் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில்" பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத்தலைவர் செ.மார்ட்டீன் தலைமையேற்க மாவீரர் பாடல்கள் ஒலிக்க வீரவணக்க நிகழ்வு ஆரம்பம் ஆனது.
தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பெயர் கொண்ட இரு மாணவர்களும் , பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியின் சகோதர் தா.செ.பழனிச்சாமியும் தீபம் ஏற்றி வீரவணக்க நிகழ்வினை தொடங்கிவைத்தனர்.கொளத்தூர் பொதுமக்கள் பெண்கள், முதியவர்கள் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் திரளாக திரண்டு வந்து வரிசையில் நின்று அமைதியாக தீபம் ஏற்றி மலர் தூவி தங்கள் வீரவணக்கத்தினை செலுத்தினர்.
இந்நிகழ்வினை பெரியார் திராவிடர் கழகத்தின் டைகர் பாலன் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார். ஒன்றியத்தலைவர் சூரியகுமார், ஒன்றிய அமைப்பாளர் காவை ஈசுவரன், ஒன்றியச்செயலாளர் காவை இளவரசன், மாவட்ட இளைஞரணிச்செயலாளர் விசயக்குமார், நகரச்செயலாள இளஞ்செழியன், காவை சசிக்குமார் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை கவனித்தனர்.
முன்னதாக சேலம் கோவிந்தப்பாடி அருகில் "பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நகர்" பெயர்ப்பலகையை தோழர்கள் காவை ஈசுவரன் சேலம் டேவிட் ஆகியோர் திறந்துவைத்தனர்.













Wednesday, November 25, 2009

மாவீரர் நாள் நவம்பர் -27 -2009

உலகமெல்லாம் தமிழினத்தை அறியச்செய்து அடையாளப்படுத்தி பழந்தமிழ்ச்சங்க இலக்கியங்கள் கூறும் வீர வரலாறுகளை நிலைநிறுத்தி சுதந்திரமான வாழ்வுக்காக யாரும் செய்யமுடியாத எண்ணற்ற உயிர்கொடைகளை வழங்கியோர் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆவர் .

ஈழமண்ணில் நடந்த விடுதைலைப்போரில் இதுவரை வீரமரணம் அடிடைந்து வரலாறாகியுள்ள மாவீரர்களின் நினைவு நாள் நவம்பர் -27.1982 ல் சங்கர் என்கிற சத்தியநாதன் முதல் விடுதலை வீர விதையாக அந்த நாள் தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களால் மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த நாள் தமிழர்களின் வரலாற்றில் பதிவுசெய்து தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய நாள் ஆகும்.

தமிழர்களே இந்நாளில் ஈழத்தில் நம் உறவுகள் முள்வேலிக்குள் அடைபட்டு கிடக்கிறார்கள். இந்தியாவின் தமிழ் இன எதிரிகளும், தமிழ்நாட்டில் தமிழின துரோகிகளும் சிங்களவனின் பாதணிக்கு கூட மெருகூட்டும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இன மானமுள்ள மக்களே ! நம் தமிழினத்தின் மான வாழ்வுக்காகவும் , விடுதலைக்காகவும் போராடி களத்தில் வீரமரணம் எய்திய மாவீரர்கள் நம் உறவுகள் அல்லவா? உலகையே வியப்பில் ஆழ்த்தி தமிழன் யார் என அடையாளப்படுத்தியவர்கள் அல்லவா? அவர்களை மரியாதை செய்யும் நாளில் விடுதலைப் போரில் தம்முயிர் ஈத்த அம் மாவீரர்கள் நம் தொப்புள்கொடி உறவுகளே என்ற உணர்வோடு நவம்பர் -27 , மாலை 6.06 க்கு மெழுகுவர்த்தி ஏந்தியோ- மௌனமாய் நின்றோ கடைகளிலோ, வீதியிலோ, வீட்டிலோ எங்கிருந்தாலும் ஒரு நிமிடம் வீரவணக்கம் செலுத்துவோம்.

இவன் ,
பெரியார் திராவிடர் கழகம்


Friday, November 13, 2009

திராவிடரும் - தமிழரும்: பெரியார் தரும் விளக்கம் குழம்பி நிற்போர், தெளிவு பெறுவார்களா?

திராவிடரும் - தமிழரும்: பெரியார் தரும் விளக்கம் குழம்பி நிற்போர், தெளிவு பெறுவார்களா? திராவிட எதிர்ப்பு என்ற குரல் பெரியாருக்கு எதிராக மீண்டும் சில மேடைகளில் ஒலிக்கத் தொடங்கி யிருக்கிறது. பெரியார்திராவிடர்என்ற குறிப்புச் சொல்லை பயன் படுத்த நேர்ந்ததை விளக்குகிறார், இக்கட்டுரையில்!

கன்னட, மலை யாளிகள் சுயமரியாதை உணர்வற்ற வர்கள் என்று கூறும் பெரியார், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயரில்லாததால், தமக்கு நேர்ந்த மனத் துயரையும் சுட்டிக் காட்டுகிறார். பெரியாருக்கு எதிரான விமர்சனங் களை முன் வைப்போருக்கு, இந்த அறிக்கை உரிய பதிலைத் தருகிறது.

நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததி லிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலை யாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங் களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது.

என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலை யாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை.

ஆகவே, இவ்விரு துறை யிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம். மூன்றாவது - இவர்கள் இருநாட்ட வர்களும் பெயரளவில் இருநாட்ட வர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். 1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3. வட ஆர்க்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. ராமநாதபுரம், 10. திருநெல்வேலி, 11. தஞ்சை 12. தென்னார்க்காடு, 13. தென் கன்னடம், 14. மலபார். அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந் திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற் கிறேன். இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை, மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனி நாடாக ஆகிவிட்டால் - நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்கு பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன்.

நிற்க, இந்தப் பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக் கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட் டினுடையவும், மொழியினுடை யவும் பெயர் அடியோடு மறைக்கப் பட்டுப் போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டு ஆத்திரம்தான். நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த் தார்கள்.

பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்தால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களை யும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும், திராவிடன் என்று சொல்லை விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.

இந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, இப்போது மற்றொரு மாபெருந் தொல்லை நெஞ்சில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றியிருக்கிறது. அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் - மேல் சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு, மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன்.

நம்நாடு எது நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன். - பெரியார்,

விடுதலை’ 12.10.55

Tuesday, October 13, 2009

பெரியார் தீபாவளியைப் பற்றி பேசுகிறார்

தீபாவளி தமிழர் விழாவா?
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ஆமாம்என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?


சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

(விடுதலை பிறந்தநாள் விழா மலர் -94 )


துன்பம் தரும் தீபாவளி

தீபாவளி என்கின்ற வார்த்தைக்கு விளக்கு வரிசை அதாவது விளக்குகளை வரிசையாக வைத்தல் என்பது பொருள். இது கார்த்திகை தீபம் என்னும் பெயரில் பண்டிகை நாட்களில் செய்யப்பட்டு வருகிறது. வடநாட்டில் விளக்கு வரிசை வைத்துத்தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை தினத்தை, நரக சதுர்த்தசி என்றும் சொல்வதுண்டு. இதற்குக் காரணம், நரகாசுரன் என்பவன் விஷ்ணுவால் கொலை செய்யப்பட்டநாள் என்பதாலும். இந்தக் கதை விளக்கம் என்னவென்றால், அது மிகவும் ஆபாசமானது என்றாலும் ஆரியர்களின் இழிநிலைக்கும், தமிழர்களின் முட்டாள்தனத்துக்கும் ஆதாரத்துக்காக அதைவும் ஆரியப் புராணப்படியே சற்றுச் சுருக்கமாக விளக்குவோம்.

இரண்யாட்சன் என்ற இராட்சதன் ஒருவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்ச்திரத்தினடியில் போய் ஒளிந்து கொண்டானாம். மகாவிஷ்ணு என்னும் கடவுள் அவனைச் சமுத்திரத்திலிருந்து வெளியாக்கி, பூமியைப் பிடுங்குவதற்காகப் பன்றி உருவமெடுத்துப் போய் இராட்சதனைப் பிடித்துப் பூமியைப் பிடுங்கி விரித்து விட்டுவிட்டாராம். அந்தச் சமயத்தில் அந்தப் பன்றியைப் பூமாதேவி கலவி செய்ய விரும்பிக் கலந்தாளாம்.

அக்கலவியில் ஒரு குழந்தை பிறந்ததாம். அக்குழந்தைக்குத்தான் நரகாசுரன் என்று பெயராம். இவன் கசேரு என்பவளை யானை உருவத்துடன் சென்று பலவந்தமாய்ப் பிடித்து வந்து மணம் செய்து கொண்டானாம். மற்றும் அவன் தேவர்களுக்கு இடையூறு செய்து வந்தானாம். தேவர்கள் விஷ்ணு இடத்தில் முறையிட்டார்களாம்.

விஷ்ணு கிருஷ்ணாவதாரத்தில் அவனைக் கொன்றாராம். நரகாசுரன், தனது சாவு நாளை உலகம் கொண்டாட வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டுக் கொண்டானாம். அதற்காக விஷ்ணு அந்த நாளை உலகம் கொண்டாடும் படி செய்தாராம். இது தான் தீபாவளியாம்!

தோழர்களே, ஆரியரின் கதை சோடிக்கும் சின்னப் புத்தியைப் பாருங்கள். அதை நம்பி விழாக் கொண்டாடும் உங்கள் மடப் புத்தியை எண்ணி வெட்கப்படுங்கள். ஏனெனில் பூமியை இராட்சதன் பாயாகச் சுருட்டினான் என்றால் அப்போது எங்கிருந்து கொண்டு சுருட்டி இருப்பான். சமுத்திரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டான் என்றால் அப்போது சமுத்திரம் எதன் மேல் இருந்திருக்கும். கடவுளுக்குச் சக்தி இருந்தால் பூமியையும், நரகாசுரனையும் வா என்று அழைத்தவுடன் வந்திருக்காதா? அப்படித்தான் வரவில்லையானாலும் நல்ல ஆகாரம் சாப்பிடும் ஜீவஉரு எடுக்காமல், மலம் சாப்பிடும் ஜீவஉரு எடுப்பானேன்?

அந்த அழகைப் பார்த்துப் பூமிதேவி அவனைக் கலவி செய்ய ஆசைப்பட்டாள் என்றால் பூமிதேவியாகிய பாரதத் தாயின் யோக்கியதை எவ்வளவு இழிவானது? நம் பாரதத் தாயின் கற்புக்கும் காமத்திற்கும் எதை உதாரணமாகச் சொல்லுவது. அவளுடைய புத்திரர்கள் பரிசுத்த ஆவியினுடைய புத்திரர்களைக் காட்டிலும் எவ்வளவு மோசமானவர்களாக இருந்திருக்க வேண்டும். பூமிதேவியும், சமுத்திரமும் என்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களின் பாரததேவியும், அரபிக்கடலும், வங்காளக்குடாக் கடலுந்தானா இதை அந்நியர்கள் கேட்டால் என்ன சொல்லுவார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இவற்றையெல்லாந் தமிழர்கள் பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை உணர்ந்திருந்தும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினால் ஆரியர்கள், தமிழர்களைத் தாசிமக்கள், மடையர்கள், கண்டதைப் புசிப்பவர்கள், புறமுதுகிட்டு ஓடியவர்கள், அடிமைகள் என்றெல்லாம் இன்னும் என்னென்னவோ சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தானே அர்த்தமாகும்? அப்படித்தானே அன்னிய மக்கள் நினைப்பார்கள்?

ஆகவே, பாமர மக்களுக்குப் புத்தி இல்லாவிட்டாலும், மற்ற தமிழ்ப் பண்டிதர்களும், தங்களை உண்மைத் தமிழ் மக்கள் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுமாவது இவற்றை நன்றாய்க் கவனித்துப் பார்த்து, பண்டிகை கொண்டாடாமல் இருந்து, மற்ற பாமர மக்களுக்கு வழிகாட்ட வேண்டாமா?

இந்தி ஆரிய மொழி என்றும், ஆரியப் புராணங்களைத் தமிழர்களுக்குப் படிப்பித்து ஆரியக் கதைகளைப் புகுத்தி ஆரிய ஆதிகத்தை நிலைநாட்டவே இந்தியை ஆரியர்கள் கட்டாயமாய்ப் புகுத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொள்வது உண்மையானால் அதற்காகத் தமிழ்மக்கள் அதிருப்தியும் மனவேதனையும் படுவது உண்மையானால் தமிழ்மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் பண்டிதர்கள் தீபாவளி கொண்டாடலாமா?

(குடிஅரசு கட்டுரை: 31.10.1937)


அக்கிராசனர் அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

தீபாவளிப் பண்டிகை என்று கஷ்டமும், நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வந்துபோகின்றது. அதிலும் ஏதாவது அறிவுடைமை உண்டா என்று கேட்கிறேன். தீபாவளிப் பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித் தனமானதுமாகும். அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசுரன் என்பவன், வருணனுடைய குடையைப் பிடுங்கிக்கொண்டதால் விஷ்ணு கடவுள் நரகாசுரனைக் கொன்றராம். இதைக் கொண்டாடுவதற்காகத் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறதாம்.

சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியுள்ள தன்மையோ அறிவோ இருக்கிறதா என்பதைப் பாருங்கள். விஷ்ணுக் கடவுள் பூமியைப் புணரமுடியுமா என்றாவது, பூமியைப் புணர்வதால் பிள்ளை பிறக்குமா என்றாவது யோசித்துப் பாருங்கள். இப்படிப் பொய்யான பண்டிகையினால் எவ்வளவு நஷ்டம், எவ்வளவு கடன், எவ்வளவு அறியாத்தனம், எவ்வளவு பிரயாசை என்பவைகளை நம் மக்கள் நினைப்பதேயில்லை. அப்பண்டிகையைக் கொண்டாட ஒவ்வொருவனும் தேவைக்குமேல் செலவுசெய்து துன்பப்படுகிறான். தன்னிடம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது. கடன் என்றால் ஒன்றுக்கு ஒன்றரைப் பங்கு வட்டி ஏற்பட்டுவிடுகின்றது.

பட்டாசு கொளுத்துவது எவ்வளவு துன்பம் என்றும், இதனால் பலவித அபாயங்கள் தோன்றி உபாதைகள் ஏற்பட்டு விடுவதும், துணியில் நெருப்புப் பிடித்து உயிர்போவதாலும், பட்டாசு சுடும்போது திடீரென்று வெடிப்பதால் உடல் கருகி, கண், மூக்கு, கை, கால் ஊனம் வருவதும் அல்லாமல், இந்தப்பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் சாராயம் குடித்து மயங்கித் தெருவில் விழுந்து புரண்டு மானம் கெடுவதும், மேலும் இதற்காக இனாம் என்று எத்தனை பாமரர் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்துப் பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களினால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு அறிவு செலவாகின்றது என்றும் எண்ணிப் பாருங்கள். இவைகளை எந்த இந்தியப் பொருளாதார தேசிய நிபுணர்களாவது கவனித்தார்களா என்று கேட்கிறேன்.

(ஈரோடு உண்மை நாடுவோர் சங்கத்தில் சொற்பொழிவு 'குடிஅரசு' 20.10.1929)

தீபாவளிப் பண்டிகை தமிழர்களுக்கு மானக்கேடு

வருடா வருடம் கடவுள்களுக்கு (சாமிகளுக்கு) கலியாண உற்சவம் வருவது போல் வருடா வருடம் தீபாவளி போன்ற பண்டிகைகளும் வந்து கொண்டு இருக்கின்றன. நம் மக்களும் பெரும்பான்மையோர், கடவுளுக்கு உலகில் வேறு எங்காவது கலியாணம் செய்வாருண்டா? கடவுள்தானா கட்டும், கலியாணம் செய்துகொள்ளுமா? அதற்கு அவசியமென்ன? என்கிற அறிவே சிறிதுமின்றி எப்படி கோயில்களில் ஆண்டுதோறும் சாமிகளுக்குக் கலியாண உற்சவம் செய்கிறார்களோ அதே போல் இந்த தீபாவளி முதலிய பண்டிகைகளை நம் மக்கள் அனேகம் பேர் கொண்டாடி வருகின்றார்கள்.

இந்த தீபாவளிப் பண்டிகையின் உண்மை என்ன? அதன் தத்துவம் என்ன? என்பது பற்றி நம் மக்களுக்குக் கவலையிருப்பதில்லை. ஏதாவதொரு சாக்கு சொல்லி பண்டிகைகள் கொண்டாடவேண்டும். கடவுள் பக்தி, மத பக்தி உள்ளவர்களாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் சிலர் (வியாபாரிகள்) பணம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைத் தவிர நம் மக்களுக்கு அவற்றின் உட்கருத்தை அறிவது என்கிற உணர்ச்சியோ கவலையோ இருப்பதில்லை.

சாதாரணமாக நம்மைப் போல் உள்ள ஒரு மனிதனை நாம் பிராமணன் என்று கருதி அவனை பிராமணன் என்றே அழைக்கின்றோம் என்றால் அதன் கருத்தென்ன? என்பது பற்றிச் சிந்திப்பதே இல்லை. ஒருவனை நாம் பிராமணன் என்றால் நாம் யார்? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நம்மை நாம் எந்தப்படியும் நினைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட தன் கருத்து என்ன ஆகியது? அவனை பிராமணன் என்று அழைப்பதால் நாம் நம்மை சூத்திரன் என்றே ஒப்புக் கொண்டதாகத்தானே ஆகிறது. இந்த அறிவுத் தெளிவு இல்லாததனாலேயே நம்மைப் போன்ற ஒரு மனிதனை பிராமணன் என்று அழைக்கின்றோம்.

நாம் ஏன் தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடாமல் வெறுத்து ஒதுக்க வேண்டுமென்பதுமான விஷயங்களைப் பற்றிய பிரசாரங்களும் வேண்டுகோள்களும் செய்து வருவதன் நிலையுமாகும். அது போலவே இக்காரணத்தினால்தான் அதாவது நம்மை இந்த இழிநிலையிலேயே அழுத்தி வைத்திருக்க வேண்டுமென்ற காரணத்தால்தான் இந்த நடத்தைகளால் பலனடைந்து நம்மை இழிவுபடுத்தி ஒடுக்கி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் என்பவர்களின் உற்சவம், பண்டிகை, வர்ணாசிரம சாதிக்கிரமம், அவற்றை அனுசரித்த ஆதராங்களாகிய வேதசாஸ்திர புராண இதிகாசம், அவை சம்பந்தமான இலக்கியம் முதலியவை காப்பாற்றப்படவும் பிரசாரம் செய்வதும், இயல், இசை, நாடகம் மூலம் அவற்றைப் பரப்பி வருவதுமான எதிர் முயற்சிகளும் ஆகும்.


இது பழைய போராட்டமே

இந்த இரண்டு போராட்டங்களும் இந்த நாட்டில் இன்று நேற்றல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன என்பதை நாம் இன்று அதிகாரப் பூர்வமாக காணலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கிறது என்பதைக் காட்டுவது தான், அதை ஆதிரிக்கத் தூண்டுவதுதான், அந்தத் தன்மையை நிலைத்திருக்கச் செய்வதுதான் இன்றைய உற்சவம், பண்டிகை முதலிய காரியங்களாகும். எதனால் இதை இந்தப்படி நாம் சொல்கிறோம் என்றால் ஏறக்குறைய 100 க்கு 90 க்குக் குறையாத உற்சவங்கள், பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், ஏற்பாடுகள், கொண் டாட்டங்கள், விரதங்கள், நோன்புகள் முதலிய அனேக காரியங்களுக்கும் இந்தப் புராண இதிகாசங்களும், சமுதாய நடப்புகளுக்கான சாஸ்திர தர்மங்களுமே காரணங்களாக இருந்து வருவதாலேயே இப்படிக் கூறுகிறோம்.


இந்தக் காரணங்களால், பிராமணன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும், சூத்திரன் என்பதாக ஒரு சாதி மகன் இருக்கவும் நாமே இடங்கொடுத்து உதவி செய்தவர்களாகி விடுகிறோம். இதனால் பார்ப்பனர்கள், தாங்கள் பிராமணர்கள் (உயர்சாதி) என்று எண்ணிக் கொண்டு நம்மை சூத்திரர்கள் என்றே கருதி மற்றெல்லா விஷயங்களிலும் நம்மைக் கீழ்ச் சாதி மக்களாகவே நடத்தி வருகிறார்கள்.

இது போலவே நாம், இந்த தீபாவளி போன்ற பண்டிகைகளைக் கொண்டாடுவதன் மூலம் நாம், நம் இழிநிலையை உணராத - மான உணர்ச்சியற்ற மக்களாக ஆகி வேறு யாராவது நமது இழிநிலை ஒழிப்புக்காகச் செய்யும் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டைப் போட்டவர்களாகி நம் பின் சந்ததிகளுக்கும் மான உணர்ச்சி ஏற்டாமலும் இழிவு படுத்தப்படவும் ஆதரவு தேடி வைத்தவர்களாகி விடுகிறோம்.


இன்று நம் நாட்டில் அரசியல், பொருளியல், கல்வி இயல், சமய, சமுதாய இயல் என்பவைகளின் பேரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், குறிப்பாக திராவிடர் கழகத்தாரால் செய்யப்படும் கிளர்ச்சிகளும், மற்றும் பல பொது முயற்சிகளும் எதை அடிப்படையாகக் கொண்டவை என்று சிந்திப்போமே யானால், உண்மையில் அதன் அடிப்படைத் தத்துவம்., நம் மக்கள் பெரும்பாலோருக்கு அதாவது 100-க்கு 90 பேருக்கு இருந்து வரும் பிறவி இழிவும், அவ்விழிவு காரணமாக நமக்கு இருந்து வரும் பல உரிமை மறுப்புகளும், முன்னேற்றத் தடைகளும் ஒழிய வேண்டும், ஒழிக்கப்பட வேண்டுமென் பதும், நம் எதிரிகளால், அதாவது நம்மை இழிவுபடுத்தி வைத்து நம் உழைப்பால் சுகம் அனுபவத்துக் கொண்டு மக்களின் இந்த நிலையை இப்படியே நீடித்து இருத்தி வைத்திருக்க வேண்டும் என்பதுமான, ஒரு போட்டா போட்டி முயற்சியேயாகும் என்பது புரியும்.

இம்முயற்சி காரணமாகத்தான் நாம் ஏன் ஒருவனை பிராமணன் என்று அழைக்கக்கூடாது என்பதும், நாம் ஏன் உற்சவாதி பண்டிகைகளைக் கண்டிக்க வேண்டும் என்பதும் ஆகும். உதாரணமாக கடவுள் அவதாரங்கள், கடவுள் செய்த யுத்தங்கள், கடவுள் செய்த

(சம்மாரக்) கொலைகள், கடவுள் செய்த வஞ்சக (கபடநாடக)ச் செயல்கள், கடவுள் காலடியில் அழுத்தி மிதித்துக் கொண்டு இருக்கும் சூர, அசுர, ராட்சதாதிகள் முதலியன யாவும் எதற்காக என்று பார்த்தோமானால், இது நன்றாக விளங்கிவிடும்.

கந்த புராணம், பாகவத புராணம், இவை சம்பந்தமான மற்ற இதிகாசங்கள் முதலியன யாவும் சாதிப் போராட்டமாகவும், பிறப்புப் போராட்டமாகவுமே இருந்து வருவதோடு மேல் சாதி என்பதை ஒப்புக் கொள்ளாமல், மேல் சாதி சம்பிரதாயத்தையும், உரிமையையும், நடப்புக்களையும், கீழ்ச்சாதியார் எதிர்த்துச் செய்த புரட்சியான போராட்டங்களாகவே இருந்து வரும்.

இதுதான் தேவாசுர (சுரர் - அசுரர்) போராட்டமாகவும், இராட்சத சம்மாரங்களாகவும் இன்றும் கருதப்பட்டு வருவதாகும். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் சிவன், கந்தன், காளி, விஷ்ணு அவதாரமான ராமன், கிருஷ்ணன், பலராமன், நரசிம்மன், வராகமூர்த்தி, முதலானவர்களும், சுரர் - அரக்கர் முதலியவர்கள் பிராமண தர்மத்தை எதிர்த்ததற்காகவே தோன்றி, எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இந்தக் கொலைச் செய்கையைப் பாரட்டவும், கொலையைப் பற்றி மகிழ்ச்சியடையும்தான் பண்டிகை உற்சவம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறலாம்.


ராட்சதர்கள் யார்?

புராண இதிகாச அசுரர்கள், சூரர்கள், அரக்கர்கள், ராட்சதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? தேவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? என்று பார்த்தோமேயானால் முறையே இந்த சூத்திரர்களும், பார்ப்பனர்களும் என்பவரல்லாமல் வேறு யாரைக் குறிக்கிறது? என்று யாராவது ஆதாரம் காட்ட முடியுமா? என்று பார்த்தால் முடியவே முடியாது என்பது அநேக அறிஞர்கள் ஆராய்ச்சியாளர்களால் மேதாவிகளால் எழுதப்பட்டிருக்கும் இன்றைய ஆராய்ச்சி நூல்களிலே அறியலாம்.

புராணங்களையே எடுத்துக் கொண்டாலும் பாகவத புராணத்தில் இரண்யன் வதைக் கதையில் இரண்யன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் இக்கருத்தைத் தெளிவாய் விளக்குகின்றன. அதாவது இரண்யன் பார்ப்பனர்களுக்கு எதிரி, பார்ப்பனர்களின் உயர் சாதித் தத்துவத்தையும், அவர்களுடைய ஜப, தப மந்தரத் தத்துவத்தையும், ஒப்புக் கொள்ளாதவன், பார்ப்பனர்களை அடிமையாக்கிக் கொண்டு அவர்களிடம் வேலை வாங்குகிறவன், இரண்யன் பிராமணர்களை ஆதரிப்பதற்கு ஆக இவர்களால் ஆக்கப்பட்ட விஷ்ணுவின் சகாயத்தினால் இவ்வளவு அக்கிரமங்கள் செய்வதால் இந்த விஷ்ணுவை முதலில் ஒழிக்க வேண்டும். இந்த விஷ்ணுவுக்கு ஆராதனம், எக்கியம், அவிர்ப் பாகம் செய்யும் பிராமணர்களை அடியோடு ஒழித்து ஆக வேண்டும். ஆதலால், ஓ! தானவர்களே (ஏவலாளர்களே) மண்வெட்டி, கோடரி, கடப்பாரை கொண்டு புறப்படுங்கள் ! பிராமணர்கள் ஜபதபம் ஓமம் செய்யுமிடத்தை அணுகுங்கள்!

அவைகளைத் தரை மட்டமாக்குங்கள்! புறப்படுங்கள் ! என்று சொன்னதாக இரண்யன் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது.

இப்படியே இரண்யன் தம்பி மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவன் பூமியையே பாயாகச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது போலவே இராவணன் மீதும், அவன் தேவர்களுக்கு விரோதமாக அவர்களின் யாகாதிகளை அழித்ததாகவும், பார்ப்பனர்களை வீட்டு வேலைக்கு வைத்துக் கொண்டு வேலை வாங்கியதாகவும், தேவர்களுக்குக் கேடு செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. இது போலவே கந்த புராணத்தில் சூரன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இவைகள் நடந்தனவோ, இல்லையோ, உண்மையோ, பொய்யோ எப்படி இருந்தாலும் மேல் சாதி - கீழ்ச் சாதி, சூரர்-அசுரர், தேவர்-ராட்சதர்கள் என்னும் பேரால் யுத்தங்களும் தேவர்களால் மற்றவர்கள் கொல்லப்பட்டதுமான கருத்துக்களையும் சங்கதிகளையும் கொண்டதாக இருக்கின்றன என்பதும் யாராலும் மறுக்கமுடியாது. பாகவதத்தில் இரண்யன், பிராமணர்கள் மோசக்காரர்கள், பிராமணர்களை அழிக்க வேண்டும் என்றும் சாதி குறிப்பிட்டுச் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மற்றும் கந்தபுராணமும், இராமாயணமும் பார்த்தால் அவற்றில் வரும் பெயர்கள் மட்டும் வேறு வேறாக இருக்கின்றனவேயொழிய இரண்டும் ஒரே கதையைத்தான் குறிக்கின்றன. கருத்தும் தேவாசுர யுத்தம்தான் என்று எவரும் உணரலாம்.

எனவே இப்படிப்பட்ட அதாவது நமக்குக் கேடும் இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா? என்பதுதான் இன்றையப் பிரச்சினையாகும்.


தீபாவளி

இப்படிப்பட்ட தத்துவம் கொண்ட பண்டிகைகளில் ஓன்றுதான் தீபாவளி! முதலாவதாக இந்தப் பண்டிகைக்கும், அதன் பெயருக்கும் சம்பந்தமே இல்லையெனலாம். தீபாவளி என்ற சொல்லுக்கு தீப வரிசை (விளக்கு வரிசை) என்றுதான் பொருள். கார்த்திகை மாதத்தில் இது போன்ற ஒரு பண்டிகை கொண்டாடுகின்றார்களே அது இந்தப் பெயருக்குப் பொருத்தமாகலாம். இந்த தீபாவளிப் பண்டிகை கொண்டாடவேண்டிய அவசியத்துக்காக குறிப்பிடும் நிகழ்ச்சி என்னவெனில், நரகாசுரன் என்ற ஒரு அசுரன் ஒரு தெய்வப் பெண்ணைச் சிறை பிடித்துக் கொண்டான். (கந்த புராணம் - இந்திரன் மனைவியை சூரன் சிறைப் பிடித்த கதை. இராமாயணம் - சீதையை இராவணன் சிறைப் படித்த கதை. தீபாவளி - நரகாசுரன் கசேரு என்ற பெண்ணை சிறை பிடித்த கதை). மற்றும் வேறொரு தெய்வப்பெண் அதிதி என்பவளின் காதணியை கவர்ந்து கொண்டவன். (எதற்காக எப்படிக் கவர்ந்தானோ தெரியவில்லை).

இது தவிர இவன் பிறப்பு வளர்ப்பும் அதிசயமானது. பூமியைப் பாயாகச் சுருட்டிய இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு பன்றியாகத் தோன்றி பூமாதேவியுடன் கலந்து பெற்ற பிள்ளை இவன்! பின் கிருஷ்ணனாலும் அவன் மனைவியாலும் கொல்லப்பட்ட பின் தேவர்கள் சுகமடைந்தார்கள் என்பது கதை! அந்த சுகத்துக்காகத்தான் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டுமாம். அதற்காக தீபாவளி கொண்டாட வேண்டுமாம்.

இதுதான் தீபாவளித் தத்துவம். கதையைக் கவனித்தால் இது சிறிதாவது மனிதத் தன்மைக்கோ, பகுத்தறிவுக்கோ ஏற்றதாக இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா? இத்தனை ஆபாசமும், அசிங்கமும் கொண்ட கதையை நாம் தெய்வீகத் தன்மை கொண்டதாக ஏற்று, ஏன் கதைவிட அல்லாமல் உண்மையில் நடந்த தெய்வக் கதையாக ஏற்றுக் கொண்டாடுவதா என்பது யோசிக்கத் தக்கதல்லவா?

நரகாசுரன் ஒரு திராவிட அரசனாகவும் திராவிடத்தை (வங்கத்தை)ச் சேர்ந்த ஒரு பிராகஜோதிஷம் என்னும் நகரை ஆண்டவனாகவும் அதே புராணங்களில் காணப்படுகின்றான். கதை எப்படியிருப்பினும், இவனும் - நரகாசுரனும், இரண்யாட்சன், இரண்யன், இராவணன், சூரபதுமன் முதலிய திராவிடர் தலைவர்களோடு ஒருவனாக மதிக்கப்பட வேண்டியவன் ஆவான். இவன் தன்னைப் பெற்ற தகப்பனால், தாயால் கொல்லப்பட்டதாகக் கதை கூறுகிறது. காரணம் தேவர் களுக்குத் தொல்லை கொடுத்ததால் என்கிறது புராணம். ஆகவே இன்று நாம் (திராவிடர்கள் - தமிழர்கள்) இரண்யனையும், இராவணனையும் எப்படிப் போற்றிப் புகழ்ந்து மரியாதை செய்கின்றோமோ அது போலவே நரகாசுரனும் நம் மரியாதைக்கு உரியவனாவான். ஆதலால் அப்படிப்பட்ட நம் தலைவனை தேவர் கூட்டம் கொன்றதற்கு நாம் துக்கப்பட வேண்டுமே ஒழிய மகிழ்ச்சியடைவது மடமையும் இழிவும், மான ஈனமுமாகும்.

ஆதலால், திராவிட மக்கள் அனைவரும், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடக்கூடாது என்று வேண்டிக் கொள்வதோடு, திராவிடர் கழகத்தவர் கண்டிப்பாகக் கொண்டாடக்கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறோம். தீபாவளியன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன் ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

(சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை -"விடுதலை" 7.11.1963)

தீபாவளி தேவையா?

வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

தீபாவளியின் பெயரால் ஏறக்குறைய 20 கோடி மக்களாவது பண்டிகை கொண்டாடி இருப்பார்கள். இவர்கள் பண்டிகை கொண்டாடியதன் பயனாய் சுமார் 10 கோடி ரூபாய்க்குக் குறையாமல் பாழ்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 10 கோடியும் அனாவசியமாய் - துணி வாங்கிய வகையிலும், பலகாரங்கள் செய்த வகையிலும், பட்டாசு வாங்கிப் பொசுக்கிப் புகையும் கரியுமாக ஆக்கிய வகையிலும் செலவாகி இருக்கும் என்பது மட்டும் அல்ல; பண்டிகை நாளில் வருத்தமின்றிக் களித்திருக்க வேண்டும் என்பதைக் கருதி ஏழை மக்கள்கள், சாராயம், பிராந்தி, விஸ்கி, ஜின், ஒயின், பீர், ராமரசன் முதலிய வெறி தரும் பானங்களைக் குடித்துக் கூத்தாடிய வகையிலும் ஏராளமான பணம் செலவழிந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பண்டிகையினால் வெற்று நாளில் மறந்துபோயிருந்த - சாமிக்குப் படையல் போடத் தூண்டும் புராணக் கதை, மூட நம்பிக்கை மக்கள் மனதில் மறுபடியும் வந்து குடிபுகுந்ததோடு அவர்களுடைய செல்வமும் கொள்ளை போகும் நிலை ஏற்பட்டது.

இவ்வளவு மாத்திரமல்ல; தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறை விட்டதன் பயனாய்த் தினக் கூலிக்கு வேலை செய்யும் ஏழை மக்கள் கூலியை இழந்ததோடல்லாமல், கடன் வாங்கி நஷ்டமடைந்தது எவ்வளவு? வேலை நடக்கும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு அதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு? தீபாவளிக்கு முன் சில நாட்களும், தீபாவளிக்குப் பின் சில நாட்களும், தீபாவளியைக் கருதி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டுகளிலும், வேடிக்கைகளிலும் கவனம் செலுத்திய காரணத்தால் அவர்கள் படிப்புக்கு நேர்ந்த கெடுதி எவ்வளவு? அரசியல் காரியங்கள் நடைபெறுவதில் இதனால் தடைப்பட்ட காரியங்கள் எவ்வளவு?

(‘குடிஅரசு’, தலையங்கம், 22.11.1931)

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து - புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் - அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து; அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு; இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு; மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன் படவேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் - மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்பொருத்தமோ - சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? - என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் - நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை - தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

- ‘பகுத்தறிவு’, 1936