Tuesday, December 20, 2011

முல்லைப் பெரியாறு - 'இந்து' ராமின் பார்ப்பனத் திமிர்

தமிழீழ விடுதலையில் தனது ஊடக பலத்தை முழுமையாக தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்திய Hindu குழுமம் வழக்கம் போல தற்போது முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலிலும் தமது தமிழின விரோதப் போக்கை பார்ப்பனத்திமிருடன் வெளிப்படுத்தியிருக்கிறது. தமது குழுமத்தின் சார்பில் வரும் ஃபிரண்ட்லைன், டிசம்பர் 30, 2011 இதழில் "1886 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தமே தவறானது என்றும் முல்லைப்பெரியாறு அணை கட்டியதே தவறு, அதற்குப் பதிலாக புதிய அணையும் கட்டக்கூடாது, அந்தத் தண்ணீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக்கொள்ள வேண்டும்” என்றும் ஒரு நேர்காணல் வெளியாகி உள்ளது. அந்தக் கருத்துக்களை வெளியிட்டவர், மத்திய அரசின் முன்னாள் நீர்வளத்துறையின் தலைமைச்செயலாளரும், இந்தியாவின் முதல் தேசிய நீர் திட்டத்தின் வரைவினைக் கொடுத்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரியுமான பி.இராமசாமி அய்யர் ஆவார். இவரைப்போலவே மனித உரிமை விசயங்களில் குரல் கொடுக்கும் கிருஷ்ண அய்யரும் கேரளாவில் அச்சுதானந்தன் நடத்திய கண்டனப் பேரணியில் பங்கேற்றுள்ளார்.

மேற்கண்ட இரு பார்ப்பனர்களும் கேரளத்தில் இருப்பவர்கள். ஆனால் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டு பார்ப்பான் இந்து ராமும் கேரள பார்ப்பனர்களுடன் இணைந்து மலையாளிகளுக்கு ஆதரவாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். இராமசாம அய்யரின் நேர்காணல் வெளியாகி இருக்கும் அதே ஃப்ரண்ட்லைன் இதழில் ஆர்.கிருஷ்ணகுமார் என்பவர் முல்லைப்பெரியாறு அணையில் தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

அதையும் சிறப்பாக வெளியிட்டு மகிழ்கிறது ஃப்ரண்ட்லைன். 1886இல் தங்களுக்கு முழுஉரிமை இல்லாத, சொந்தமில்லாத நிலம் என்று தெரிந்தும் வெள்ளையரையும் ஏமாற்றி திருவாங்கூர் சமஸ்தானத்தால் போடப்பட்ட ஒப்பந்தத்தில் திருவாங்கூர் சார்பாக கையொப்பமிட்டவன் திவான் இராமையங்கார் என்ற பார்ப்பான் தான்.

மத்திய அரசின் மத்திய நீர்வழி ஆணையத்தின் தலைவராக இருந்த மலையாளியான கே.சி.தாமஸ் அண்மையில் 2011 நவம்பர் 27 அன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, "பெரியாறு அணை பாதுகாப்பாகத்தான் உள்ளது. அதன் உறுதியைப் பற்றி யாரும் கவலைப்படவேண்டியதில்லை. கேரள அரசின் கூற்றுகளில் உள்நோக்கம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரம் வரை நீர் தேக்கினாலும் எந்த ஆபத்தும் இல்லை" என்று கூறியுள்ளார்.

1980இல் அணை தொடர்பாக கேரள - தமிழ்நாடு இருமாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது. அப்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்து தலைமை தாங்கியவர் இதே கே.சி தாமஸ் தான். அப்போது மத்திய நீர் வழி ஆணையத்தின் தலைவராக இருந்தார். அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவாக, அணை பாதுகாப்பாக இல்லை என்றுகூறி அதைப் பலப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொன்னார். அதன்படி அணை பலப்படுத்தப்பட்டது. அதைத் தான் மீண்டும் கே.சி தாமஸ், 1981க்குப் பிறகு அணையின் பாதுகாப்புப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை எனக் கூறுகிறார். மேலும் இராஜஸ்தான் மாநிலத்தில் 1730ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு அணையே இன்றுவரை உறுதியாக இருக்கிறது என்றும் கூறுகிறார். ஆனால் பார்ப்பன இராமசாமியோ எந்த அணையும் 100 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பானது அல்ல என்கிறார். இந்த பார்ப்பான்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேசிய நீர்க் கொள்கையை வடிவமைத்தவராம். தமிழர்களின் ஒட்டுமொத்த ஆற்றுநீர் உரிமை இழப்புகளுக்கு இவர்தான் காரணம் என்பது தெளிவாகிவிட்டது.

அதேபோல 1979 ஆம் ஆண்டு "முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாகக் குறைத்து எஞ்சியுள்ள நீரை இடுக்கி அணைக்குத் திருப்பி அங்கு மின்சாரம் தயாரிக்கலாம்" என்ற கருத்தை முதன்முதலில் ஒரு அறிக்கையாக தயாரித்து கேரள அரசுக்குக் கொடுத்து மோதலுக்கு முன்முயற்சி எடுத்தவர் எம்.கே.பரமேசுவரன் நாயர் ஆவார். அவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் அணை உடைந்தாலும் அந்த நீரை இடுக்கி அணை முழுமையாகத் தாங்கிக் கொள்ளும், அணை பற்றி யாரும் பயப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், பி.இராமசாமி அய்யர் நேர்மாறாகப் பேசுகிறார். அவரின் நேர்காணல் இதோ:-

116 ஆண்டுகாலமான ஒரு அணையை நாம் படிப்படியாக பயன்பாட்டினின்று விலக்கவேண்டும். படிப்படியாக விலக்குதல் என்பது அதை நம்பி வாழும் மக்கள் மாற்று வாழ்வாதாரங்களுக்கு தங்களை பழக்கிக்கொள்ள நேரம் வழங்குதல் ஆகும்.

முல்லைப்பெரியாறு அணை ஒப்பந்தமானது கேரளாவிற்கு துரோகம் செய்துவிட்டதால் மக்களிடையே ஆழமான எதிர்ப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சிக்கலுக்கு இதுவே ஆணிவேர். இது இந்தியா கோசி மற்றும் காண்டக் நதி ஒப்பந்தத்தில் நேபாளின் எதிர்ப்புணர்வுக்கு சமமானது.

1886இல் திருவாங்கூர் சமஸ்தானம் ஏன் இப்படிப்பட்ட அநியாயமான ஒப்பந்தத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்? 1970-யில் ஏன் கேரள அரசு பெரிய திருத்தத்தை முன்வைக்கவில்லை? ஏன் ஆழியாறு பரம்பிக்குளம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்று தெரியவில்லை.

பொதுவாக மக்கள் சொல்கிறார்கள் எந்த அணைக்கும் 100 ஆண்டுகள் தான் ஆயுள் என்று. இந்த அணையும் அதைக் கடந்துவிட்டது. பொறியியல் நுட்பம் மூலம் கூடுதலாக ஒரு 10 ஆண்டுகள் நகர்த்தலாம். அதற்கு மேல் வாய்ப்பு இல்லை. சாசுவதமாக இது இருக்க முடியாது. எனவே இதிலிருந்து தமிழ்நாடு படிப்படியாக விலகிக்கொள்ள வேண்டும். அதற்காக நான் இதை நாளையே மூடவேண்டும் என்று சொல்லவில்லை. படிப்படியாக இதிலிருந்து விலக ஆயத்தமாக வேண்டும்.

அணையில் முழு அளவு 142 அடி. கேரளா 136 அடிக்கு மேல் விரும்பவில்லை. தமிழகத்தால் இதை வைத்துக்கொண்டு எதுவும் செய்யமுடியாதா? அது என்ன முழு தண்ணீரையுமா பயன்படுத்துகிறது?

முதலாவதாக இந்த அணை கட்டியிருக்கப்படக்கூடாத அணை. இயற்கையை அத்துமீறி வழிமறித்து கட்டப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத காலத்தில் கட்டப்பட்டது. இந்தக்காலம் என்றால் இப்படிப்பட்ட அணைகட்ட ஒப்புதல் வழங்கப்பட்டிருக்காது. ஆனால் இது நடந்துவிட்டது. வரலாற்றை நாம் திருத்தியமைக்க முடியாது. இந்த அணைக்கு வயது இப்பொழுது 116 ஆண்டுகள். இனியேனும் இதனிலிருந்து படிப்படியாக விலகிக்கொள்ள வேண்டியது அவசியம். அந்த மக்கள் மாற்று பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பழகிக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகள் அமெரிக்காவில் நடந்து வருகின்றது. நதிநீரின் இயற்கை போக்கைக் காக்க வேண்டி நிறைய போராட்டங்கள் நடந்திருக்கின்றன. இங்கே என்ன செய்யவேண்டுமென்றால் இருக்கும் நீர் அளவில் பராமரித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பயன்பாடிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

என்னுடைய பதில் என்னவென்றால், எந்த தொழில்நுட்பக் குழு அணையின் பாதுகாப்பு பற்றி என்ன அறிக்கை கொடுத்தாலும் நாம் மக்களுடைய பாதுகாப்பில் ரிஸ்க் எடுக்கக்கூடாது. மக்கள் பயந்தது பயந்தது தான். அதை மாற்றமுடியாது. அரசியல்வாதிகள் வேண்டுமானால் அரசியல்படுத்தலாம்; ஆனால் மக்களின் பயம் என்பது உண்மையானது. பூகம்ப அளவு சிறியதாக இருக்கலாம். ஆனால் மக்களின் பீதி உருவானது உருவானது தான். ஒன்றை ஒத்துக்கொள்ள வேண்டும். அணை நிரந்தரமானது அல்ல என்னும் பொழுது எத்தனை ஆண்டு என்ற கணக்கு எல்லாம் பார்க்கவேண்டியது இல்லை, மாற்று என்ன என்று பார்க்கவேண்டியது தான்.

காவிரி நீர் பிரச்சனையைப் பாருங்கள். 670 டி.எம்.சி நீரில் 480 டி.எம்.சி நீரை தமிழகம் பயன்படுத்தி வந்தது. ஆனால் அதுவே எப்பொழுதும் சாசுவதமானது என்று இல்லை. பின், கர்நாடகம் காவிரி நீரை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தபொழுது தமிழகம் குறைந்த அளவு நீருக்குப் பழகிக்கொண்டது. அது போலத்தான், மாறிவரும் சூழலுக்குத் தகுந்தது போல தமிழகம்- வைகை அணையை நம்பியிருக்கும் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

புதிய அணை தொடர்பாக சொல்லவேண்டுமென்றால், நாங்கள் 100 ஆண்டுகளுக்கு முன் தவறு செய்துவிட்டோம். மீண்டும் அதை செய்யத்தயாராக இல்லை. ஆறு என்பது இயற்கை அமைப்பு. அதைத் தடுப்பது அணை கட்டுவது என்பது தவறு. ஆற்றை வளைப்பது, மறிப்பது சுற்றுச்சூழலை கெடுப்பது என்பது தவறு. கேரளாவின் கருத்துப்படி புதிய அணையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. 999 ஆண்டு ஒப்பந்தமே மோசடியானது. கேரள அரசு தமிழகத்திற்கு நீர் தர மறுக்கவில்லை என்று சொல்லக்கூடாது. ஆழியாறு பரம்பிக்குளம் திட்டமே தவறானது. மக்கள் தமிழகத்திற்கு நீர் தர விரும்பவில்லை.

என்னதான் ரிப்பேர் செய்தாலும் அணையின் வயதைக் கூட்டினாலும், அப்படி செய்வது சரியா? அது தவறு. தமிழகம் இந்த ரிப்பேர் செய்வதற்கு செலவு செய்வது என்பது எல்லாம் விசயம் அல்ல. மேற்காக செல்லும் ஆற்றை கிழக்கு நோக்கி திருப்பி விடுவதே தவறான கொள்கை. சுப்ரீம் கோர்ட்டில் எல்லாம் இதைத் தீர்மானிக்க முடியாது. அதனுடைய பாதுகாப்பிற்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது. - ஃப்ரண்ட்லைன் 30.12.2011

பிறப்பால் மலையாளிகளான, மலையாள தேசிய இனத்தைச் சேர்ந்த கே.சி.தாமஸ், எம்.கே.பரமேசுவரன் நாயர், அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி ஆகிய நீர் மேலாண்மை வல்லுனர்களும், சட்ட வல்லுநர்களும் அணைபற்றி அச்சப்படத் தேவையில்லை என்று நேர்மையுடன் அறிவிக்கின்றனர்.

ஆனால் தமிழ்நாட்டில், தமிழர்களின் உழைப்பால் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் இந்து ராம், கேரளாவின் இராமசாமி அய்யர் போன்ற தமிழ்த் தேசிய இனத்திலோ, மலையாள தேசிய இனத்திலோ இந்தியத் துணைக்கண்டத்தின் எந்த தேசிய இனத்திலோ சேர்க்க முடியாத - எந்த தேசிய இனத்துக்கும் உண்மையாக, நேர்மையாக இருந்திராத - வரலாற்றுக் காலம் முதல் இன்று வரை பலநூற்றாண்டுகளாக துரோகக் கும்பலாகவும், சுரண்டல் கூட்டமாகவும், ஆதிக்க இனமாகவும், இந்தியர் என்ற இல்லாத தேசியஇனத்துக்கு அடையாளமாகவும் வாழ்ந்துவரும் பார்ப்பனக்கும்பலானது - அறிவும், மனிதாபிமானமும், நேர்மையும் இன்றி “இந்த அணை கட்டியிருக்கவே கூடாத அணை, இந்த அணை நீர் இல்லாமல் வாழ தமிழர்கள் பழகிக்கொள்ள வேண்டும்” என்று நெஞ்சை நிமிர்த்தி நேர்காணல் அளிக்கிறது, அச்சிட்டுப் பரப்புகிறது என்றால், அதைத் தமிழர்களும் அனுமதிக்கிறோம் என்றால் தமிழர்களைவிட, திராவிடர்களைவிட சொரணையற்ற இனம் ஒன்று உலகில் இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது.

இதுபோன்ற நிலையை எண்ணித்தான் பெரியார் அன்றே சொன்னார்,

"பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன். மத்திய அரசாங்கப் பிடியில் இருந்து திராவிட நாடு தனியாகப் பிரியாவிடில், சுதந்திரம் இல்லை, சோறு இல்லை, மான வாழ்வு இல்லை. இது உறுதி, உறுதி, உறுதி." - விடுதலை 25.02.1949

Thursday, December 15, 2011

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் பெரியார் நாடு உருவாகும்

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது; எனவே அதை உடைப்போம்' என மலையாள கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரசு, பாரதீய ஜனதா தேசிய திலகங்களும் உச்சக்கட்ட அடாவடியைத் தொடங்கியுள்ளனர். தன் நாட்டுக்கு 50 சதவீத அத்தியாவசிய உணவுப் பொருட்களை விளைவித்து அனுப்பும் தமிழனுக்கு நீர் தர மறுக்கின்றனர் மலையாளிகள். முன் எப்போதும் நடந்திராத சம்பவமாக, தமிழ்நாட்டு காய்கறி லாரிகளையும் மலையாளிகள் தாக்கி, திருப்பி அனுப்பியுள்ளனர். விவசாயம் செய்ய தண்ணி தராத கேரளாக்காரனுக்கு, அவனிடமே அடி, உதையை வாங்கிக்கொண்டு, அவனுக்கே நம் நாட்டில் இருந்து உணவுப்பொருட்களை அனுப்பி, அதன்மூலம் வயிறு வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் தமிழர்கள். எதிர்வினையாக தமிழ்நாட்டில் ம.தி.மு.க, பெரியார் தி.க, தமிழ்த்தேசிய இயக்கங்கள், தலித் அமைப்புகள் என அனைவரும் கேரள எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அனைத்துத் தரப்பிலும் நடக்கும் போராட்டங்கள் முதன்மை எதிரியை அடையாளம் காட்டாமலேயே நடந்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலுக்கு காரணம் மலையாளிகள் மட்டுமா?

முல்லைப் பெரியாறு அணை

தமிழ்நாட்டில் உள்ள இராஜபாளையம் அருகில் உள்ள சிவகிரி மலைப் பகுதியில் தான் பெரியாறு நதி உற்பத்தி ஆகிறது. இது தமிழ்நாட்டுக்குச் சொந்தமான நதி. இங்கிருந்து 56 கி.மீ பயணம் செய்து கேரள எல்லையை அடைகிறது. பெரியாற்றோடு கேரளாவில் பாயும் முல்லையாறும் இணையும் இடத்தில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது. 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் நாள் திருவாங்கூர் சமஸ்தானத்துக்கும் சென்னை இராஜதானிக்கும் இடையே ஏற்பட்ட 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேஜர் ஜான் பென்னி குக் அவர்களின் கடுமையான முயற்சியில் இந்த அணை கட்டப்பட்டது. 1970 வரை இந்த ஒப்பந்தம் எந்த இடையூறும் இல்லாமல் நடைமுறையில் இருந்துள்ளது. 1979 இல் அணை பலவீனமாக உள்ளதாக மலையாள மனோரமா ஏடு கிளப்பிய வதந்தி இன்றுவரை அணையாமல், இரு தேசிய இனங்களுக்கு இடையிலான போராக உருவாகியுள்ளது.

தேவிகுளம் - பீர்மேடு

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் தோன்றும்போதெல்லாம் தவறாமல் பேசப்படும் ஒரு செய்தி - மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது தேவிகுளம், பீர்மேடு ஆகிய தமிழர்கள் வாழும் பகுதி தமிழ்நாட்டோடு இணைக்கப்படாமல் கேரளாவோடு இணைக்கப்பட்டுவிட்டது; அந்தப் பகுதியில்தான் அணை உள்ளது; அது தான் சிக்கலின் மையம் என்று தமிழ்த்தேசிய இயக்கங்களால் குற்றம்சாட்டப்படுகிறது. இது சரியான பார்வை அல்ல. முதன்மையான - உண்மையான எதிரியை அடையாளம் காண இயலாத - அடையாளம் காட்ட விரும்பாத தன்மை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

மொழிவாரி மாகாணம் பிரிக்கப்பட்டது 1956 ஆண்டு. ஒப்பந்தம் போடப்பட்டது 1886 ஆம் ஆண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்தோடு ஏன் ஒப்பந்தம் போட்டார்கள்? அப்போது அணை இருந்த பீர்மேடு பகுதி அந்த சமஸ்தானத்துக்கு உட்பட்டே இருந்துள்ளது. அதனால்தான் ஆங்கிலேயர்களால் அந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திருவாங்கூர் சமஸ்தானத்திடம் தமிழர்கள் பகுதி போனது எப்படி? எப்போது? தேவிகுளத்தையும் பீர்மேட்டையும் மலையாளிகளிடம் 1886க்கு முன்பே இணைத்தது யார்? இவற்றுக்குப் பதில் காணவேண்டியது அவசியம். அப்போது பெரியாரோ, காமராஜரோ அரசியலில் இல்லை.

தேவிகுளம், பீர்மேடு பறிபோனது அது தான் சிக்கல்களுக்கு காரணம் என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு உண்டு என்றாலும் அந்த பறிகொடுப்புகூட இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டதால் வந்த வினைதானே? இந்திய விடுதலை இல்லை என்றால் மொழிவாரி மாகாணப் பிரிவினையே நடந்திருக்காது. தனித்தமிழ்நாடு நோக்கி பெரியாரும் ஆதித்தனாரும் இணைந்து போராடிக்கொண்டிருந்த காலம் அது. இந்த மொழிவாரிப் பிரிவினையையும் பெரியார் கடுமையாக எதிர்த்துள்ளார்.

“பிரிவினைக்குப் பெயர் மொழிவாரி நாட்டுப்பிரிவினை. இதில் பிரிந்துபோகவேண்டுமென்று வாதாடுகிறவர்கள் மொழியை ஆதாரமாகக் கொண்டுதானே பிரிவினை கேட்கவேண்டும்? அதை விட்டுவிட்டு, வேறு மொழி 100க்கு 69, 70, 80 வீதம் பேசுகிற மக்கள் உள்ள நிலையைத் தங்கள் நாட்டுடன் சேர்க்கவேண்டுமென்று கேட்பது எப்படி யோக்கியமாகும்? அல்லது இந்தப் பிரிவினைக்கு, மொழிவாரி மாகாணப் பிரிவினை என்றாவது எப்படிச் சொல்ல முடியும்?” என்றார். - விடுதலை - 07.11.1953

சர்வதேச நதிநீர் சட்டங்கள்

இன்று சாதாரணமாக கிராமங்களில் சிறுசிறு ஏரிகளில், குளங்களில் பாசனவசதி பெற்று விவசாயம் செய்பவர்களிடையேகூட கடைமடைக்காரனுக்குத்தான் முன்னுரிமை என்ற வழக்கம் உள்ளது. அதையேதான் சர்வதேச நதிநீர்ச் சட்டமும் சொல்கிறது. ஒரு நதியின் கடைமடை டெல்டா பகுதி விவசாயிகளுக்கு அல்லது பயனாளர்களுக்குத்தான் அந்த நதியில் முன்னுரிமை. அவர்கள் அனுமதியின்றி நதியின் மேல்பகுதியில் இருப்பவர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக்கூடாது. “நதியின் கீழ்நிலையில் உள்ளவர்கள் அனுமதி இல்லாமல் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அணைகள் ஏதும் கட்டக்கூடாது. நதியில் கீழ்நிலையைப் பாதிக்கின்ற வகையில் நீரை செயற்கையாக தடுத்து உபயோகிக்கக் கூடாது” என்கிறது சர்வதேச நதிநீர்ச் சட்டம். இதன் அடிப்படையில் தான் பலநாடுகளில் நதிநீர்ப் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையே ஓடும் பல நதிகள் உள்ளன. ஐரோப்பாவில் ரைன் நதியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஜெர்மன், ஃப்ரான்ஸ், லக்ஸம்பர்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே சிக்கல்கள் எழுந்தன. ஆப்ரிக்காவில் நைல் நதி பங்கீடு தொடர்பாக சூடானுக்கும் எகிப்துக்கும் சிக்கல். டான்யூப் நதிப் பங்கீட்டில் ஆஸ்த்திரியா, துருக்கிக்கு இடையே சிக்கல். வட அமெரிக்க மாகாணங்களுக்குகிடையே கொலராடோ நதிநீர்ச் சிக்கல். தென் அமெரிக்காவில் அமேசான் நதிநீர்ச் சிக்கல். ஆஸ்திரேலியாவில் முர்ரே நதிப் பங்கீடு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா இடையே சிக்கல். ஆமுர் நதிப் பங்கீட்டில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் சிக்கல் என உலகெங்கிலும் நதிநீர்ப் பங்கீட்டுச் சிக்கல்கள் இருந்தன.

அந்த வரிசையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒப்பந்தமாகும். 19.09.1960இல் அன்றைய இந்தியப் பிரதமர் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தம் சட்லஜ், ராவி, பியாஸ் ஆகிய கிழக்குப் பகுதி நதிகளையும் ஜீலம், சிந்து, செனாப் ஆகிய மேற்குப் பகுதி நதிகளையும் சமமாகப் பங்கிட்டுக் கொள்வதற்காகவும் அவற்றில் நீர்மின்சக்தித் திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் இயற்றப்பட்டதாகும்.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள சிக்கல் ஆதலால் அப்போதே ஐக்கிய நாடுகள் அவையும் தலையிட்டு ஐ.நா. அவை உருவாக்கிய நடுவர் முன்னிலையில், உலக வங்கியின் மேற்பார்வையில், உலக வங்கியும் ஒரு சாட்சியாக இந்த ஒப்பந்தம் இயற்றப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பலமுறை போர்கள் நடைபெற்ற காலத்திலும் இந்த ஒப்பந்தங்கள் மீறப்படவில்லை. இந்த நதிகளின் பங்கீட்டில் எந்த சிக்கலும் வரவில்லை. அப்படியே உருவாகி இருந்தாலும் அவற்றைத் தீர்க்கும் அனைத்து வழிமுறைகளையும் ஐ.நா மன்றமும், உலக வங்கியும் செய்திருக்கின்றன.

ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் அல்லது நாடுகளுக்கும் இடையே ஒரு நதியைப் பகிர்ந்து கொள்வதில் உருவாகும் கருத்து வேறுபாடுகளையும் சிக்கல்களையும் தீர்த்துவைப்பதற்கு சர்வதேச நதிநீர்ச் சட்டங்கள் பயன்படுகின்றன. அதில் முக்கியமான விதிகள் 1956ஆம் ஆண்டு பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கி நகரில் நடைபெற்ற நதிநீர்ப் பங்கீடு குறித்த சர்வதேச அளவிலான மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டவை ஆகும். இவை போன்ற சர்வதேச நதிநீர்ச் சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் ஐ.நா. மன்றம் பல நடுவண் அமைப்புகளை உருவாக்கியுள்ளது. அவற்றில் ICJ (International Court of Justice), PCA (Permenent Court of Arbitration) ஆகியவை முக்கியமானவையாகும்.

கேரளா ஒரு தனி நாடாகவோ அல்லது இந்தியாவுடன் இணைந்த பகுதியாகவோ இருந்து, தமிழ்நாடு ஒரு தனி குடிஅரசாக, தனி நாடாக இருந்தால் முல்லைப் பெரியாறு, காவிரி, பாலாறு போன்ற அனைத்து ஆற்றுநீர் உரிமைகளும் சர்வதேச நதிநீர்ச் சட்டங்களின்படி முழுமையாக நமக்குக் கிடைத்துவிடும். தமிழ்நாடு தனி நாடாக இருந்தால் முல்லைப் பெரியாற்றிலோ, காவிரியிலோ அண்டை நாடு தடை செய்தால், சிக்கல் உருவாக்கினால் ஐக்கிய நாடுகள் மன்றமும், சர்வதேச நடுவர் மன்றங்களும் தலையிட்டு சிக்கலைத் தீர்த்து வைக்கும். அதற்கு எடுத்துக்காட்டுதான் சிந்து நதிநீர் ஒப்பந்தம். ஆனால் ஒன்றுபட்ட இந்தியாவில் - பார்ப்பன - பனியா கும்பல்களின் ஆதிக்கத்தில் சிக்குண்டு கிடக்கும் நாட்டில் பார்ப்பன நலன்களே முன்னிறுத்தப்படும்.

பார்ப்பன இந்தியா

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 1919க்கு முன்பு நதிநீர்ப் பங்கீடு, நீர்ப்பாசனம் தொடர்பான விவகாரங்கள் இங்கிலாந்து அரசவையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. 1919க்குப் பிறகு இந்தியர்களுக்கு அதிகாரம் கிடைக்கத் தொடங்கியபோதே பார்ப்பனர்கள் கையில் அதிகாரம் சென்றதால் அனைத்துத் துறைகளையும் போலவே நதிநீரிலும் பார்ப்பன நலன்கள் முன்னிறுத்தப்பட்டன. ஆங்கிலேயர்கள் நம்மைவிட்டு போகும்வரை காவிரி, முல்லைப் பெரியாறு ஆறுகளில் சம்மந்தப்பட்ட மாகாணங்களுக்கிடையே மோதல்போக்கு இல்லாமல் ஒப்பந்தங்கள் போடப்பட்டு முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தோழர் பெரியார் சொன்னதுபோல, ஆங்கிலேயர்களிடமிருந்து பார்ப்பன - பனியாக்களுக்கு நடந்த மேட் ஓவர்தானே இந்திய விடுதலை. அப்படிப்பட்ட பார்ப்பன - பனியா இந்தியாவில்தான் தமிழர்களின் அனைத்து உரிமைகளையும் போலவே ஆற்றுநீர் உரிமைகளும் பறிபோய்விட்டன.

எனவேதான் பெரியார், "தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழர் நாட்டையும், தமிழ் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தன்னுடைய மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்" என்றார்.

உச்சநீதிமன்றம் 2006 பிப்ரவரி 27 அன்று வழங்கிய தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் கூறியது. முல்லைப் பெரியாறு அணையின் இணைப்பாக உள்ள சிற்றணையில் சிறுசிறு செப்பனிடும் பணிகளைச் செய்துமுடித்த பின் முழுக் கொள்ளளவான 152 அடிவரை தண்ணீர் தேக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. கேரள அரசின் மேல்முறையீட்டுக்குப் பிறகு 2007 ஆகஸ்டில் மீண்டும் தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால் அனைத்து தீர்ப்புகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் கேரள அரசு குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டது. இந்திய அரசின் வனப்பாதுகாப்புச் சட்டங்களையும் மீறி முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக முதற்கட்டச் சோதனைகளையும் நடத்தி முடித்திருக்கிறது.

இந்திய அரசின் சட்டங்களையோ, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளையோ மதிக்காத, செயல்படுத்தாத கேரள அரசினைக் கண்டித்து தமிழ்நாட்டு உரிமையைப் பெற்றுத் தர வேண்டிய மத்திய பார்ப்பன அரசு, எங்கோ, எந்த நாட்டிலோ பிரச்சனை என்பது போல கண்டுகொள்ளாமல் இருப்பதும், பிரச்சனை எல்லைமீறிப் போனபிறகு 'கமிஷனைப் போடு அல்லது கல்லைப் போடு' என்பது போல ஒரு விசாரணைக் கமிஷன் அமைப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது என்று சிக்கலைத் தீர்க்கும் எண்ணமில்லாமல் செயல்படுகிறது.

டேம் 999 என்ற ஒரு பொய்ப்பிரச்சாரப் படத்துக்கு மத்திய அரசு சென்சார் சான்றிதழ் அளிக்கிறது. அது கருத்துரிமை என்றால், அரசியல் சாராத கலை தொடர்பான விசயம் என்றால் நாங்களும் படம் எடுக்கிறோம். இந்திரா காந்தி கொலை பற்றி பஞ்சாப்காரனின் பார்வையில் - இராஜீவ் கொலை பற்றி ஈழத்தமிழ்ப் பெண்களின் பார்வையில் நாங்களும் படம் எடுக்கிறோம், அனுமதிக்குமா மத்திய அரசு? அவ்வளவு வேண்டாம் சங்கரராமன் கொலை பற்றி தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பார்வையில் படம் எடுக்கிறோம்; சென்சார் போர்டு அனுமதிக்குமா? இரு தேசிய இன மக்களுக்குள் மோதலை உருவாக்கக்கூடிய திரைப்படம் என நன்கு தெரிந்தும் படத்தை அனுமதிக்கிறார்கள்.


இந்தியா முழுவதும் வேதாந்தா, ஜிண்டால், போஸ்கோ, டாடா, மிட்டல், ரிலையன்ஸ் போன்ற பார்ப்பன - பனியா - பன்னாட்டுக் குழுமங்களால்தான் கனிமவளக் கொள்ளை, கல்விக்கொள்ளை, கடல்வளக் கொள்ளை, பெட்ரோலியக் கொள்ளை, அலைக்கற்றைக் கொள்ளை என அனைத்து வகையான சுரண்டல்களும் நடத்தப்படுகின்றன. மேற்கண்ட பட்டியலில் உள்ள பார்ப்பன அதிகார வர்க்கத்தின் துணையோடுதான் சுரண்டல்கள் திட்டமிட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு, சில்லறை வர்த்தகத்திலும் நேரடி அந்நிய முதலீடு, கூடங்குளம் அணுஉலை அமைப்பு என மக்கள்விரோத முடிவுகளையும் இந்த அதிகார வர்க்கம்தான் செயல்படுத்துகிறது.

இந்த பனியா - பன்னாட்டு வணிகக்கும்பல்களின் நலன்களுக்காக மேற்கண்ட பார்ப்பன அதிகார வர்க்கம் போடும் திட்டங்கள்தான் நமக்கு பட்ஜெட்டாகவும், ஐந்தாண்டு திட்டங்களாகவும், தொழில் அபிவிருத்தி திட்டங்களாகவும் அரசியல்வாதிகளால் சொல்லப்படுகிறது. அவர்களுக்கு கொள்ளை இலாபம் தரும் திட்டங்களைச் செயல்படுத்தவதற்காக இந்த பனியா - பன்னாட்டுக்கும்பல் இந்திய அரசியல்வாதிகளுக்கு பிச்சை போடும் காசைப் பங்கு போடுவதில் வரும் சண்டையும், இந்தக் கூட்டுக்கொள்ளையை மக்கள் கவனிக்காமல் இருக்க மத்திய அரசால் நடத்தப்படும் நாடகங்களும்தான் தான் நமக்கான அரசியல்.

முதன்மை எதிரி

தொடர்ந்து பல வருடங்களாக சிக்கல்களை வளரவிட்டு தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கி விட்டு, தனது சுரண்டல்களை அயராது நடத்திக்கொண்டிருக்கும் இந்தியத் தேசியமும் அதனால் பயன்பெறும் பார்ப்பன - பனியாக்கும்பல்களுமே நமது முதன்மை எதிரி. அடாவடியாக நடந்துகொள்ளும் மலையாளிகளுக்கு எதிராக அவர்களது வணிக நிறுவனங்களைத் தாக்குகிறோம்; கேரள எண் உள்ள வாகனங்களைத் தாக்குகிறோம்; கேரளாவுக்கு எதிராக பொருளாதார முற்றுகைப் போராட்டம் அறிவிக்கிறோம். எல்லாம் சரிதான். எத்தனை நாளுக்குத்தான் அம்பை மட்டும் எதிர்த்துக்கொண்டிருப்போம்? எப்போதுதான் எய்தவனை நோக்கித் திரும்புவோம்? சர்வதேசச் சட்டங்கள் நமக்கு ஆதரவாக உள்ளன. ஆனால் நாம் தனி நாடாக இருந்தால்தான் அவை பயனளிக்கும். இந்த உண்மைகளை எப்போது உரிமை மறுக்கப்பட்டவர்களிடம் சொல்லப் போகிறோம்?

இளைஞர்கள் ஆலுக்காஸ் நகைக்கடை தாக்குதல், காய்கறி லாரிகளை மறித்தல், கேரளா செல்லும் பேருந்துகளை மறித்தல், நாயர் டீக்கடை, பேக்கரிகளை உடைத்தல் என ஒவ்வொரு வருடமும் நடத்திக் கொண்டிருக்கத்தான் போகிறோம். நமது தலைவர்களும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், உச்சநீதிமன்ற வழக்கு, பிறகு நடுவர் மன்றம், அந்தத் தீர்ப்புகளை அமுல்படுத்த சாகும்வரை உண்ணாவிரதம் எனத் தொடர்ந்து இயங்கத்தான் போகிறார்கள். நவம்பர் மாதமானால் முல்லைப் பெரியாறு, ஜூன், ஜூலையானால் காவிரி உரிமைப் போராட்டம் என சீசன் வியாபாரம் போன்ற சீசன் போராட்டங்களையும், பயனற்ற சடங்குத்தனமான போராட்டங்களையும் காணச் சகிக்காமல் மனம் புழுங்கி, வெந்து முத்துக்குமார்களும் செங்கொடிகளும் தீயில் வெந்து மடிந்துகொண்டுதான் இருப்பார்கள். ஒருமுடிவு வேண்டாமா?

தமிழ்நாட்டு விடுதலையில் அக்கறையுள்ள தோழர்கள், தலைவர்கள் ஒன்றிணைந்து இந்திய தேசியத்துக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுங்கள். பெரியாரைப் போல, பெரியார் காலத்தைப் போல இந்திய தேசியக் கொடி எரிப்பு, இந்திய யூனியன் வரைபட எரிப்பு, இந்திய அரசியல் சட்ட எரிப்பு போன்ற போராட்டங்களை அறிவியுங்கள். தனித்தமிழ்நாட்டுக்கான பரப்பரைகளை முல்லைப் பெரியாறு அணையிலிருந்தே தொடங்குங்கள். உச்ச நீதிமன்றம் நம்மைக் காப்பாற்றும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நம்மைக் காப்பாற்றுவார், பாரதிய ஜனதா காப்பாற்றிவிடும், நடுவர் மன்றம் உரிமைகளைப் பெற்றுத்தரும், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டால் சாதித்துவிடலாம் என்று தமிழர்களை நம்ப வைக்காதீர்கள். இந்திய தேசியம் அலறுவதில் தான் தமிழர் உரிமை மலரத் தொடங்கும். இந்திய தேசியத்தையும் அதைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களையும் தாக்கத் தொடங்குங்கள்.

1980களில் பேராசிரியர் செ.ஆ. வீரபாண்டியனால் தொகுக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் வெளியிட்ட ‘வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ நூலில் பெரியாறு அணை, காவிரி சிக்கல்கள் விரிவாகப் பேசப்பட்டு அதன் எதிரிகள் பார்ப்பனர்களும் இந்திய தேசியமும் என்பது உறுதிப்பட்டது. அதற்குப் பிறகு தி.க.வாலும், பெரியார் தி.க.வாலும், தமிழ்த்தேசிய இயக்கங்களாலும் நடந்த ஆற்றுநீர் உரிமை தொடர்பான பரப்புரைகளும், போராட்டங்களும் பார்ப்பனர்களை எதிர்த்தோ, இந்திய தேசியத்தை எதிர்த்தோ திட்டமிடப்படவில்லை. அடையாளம்கூட காட்டப்படவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ அவர்கள் “அணை உடைந்தால் நாடு உடையும்” என சரியான திசைநோக்கித் திரும்பியிருக்கிறார். ஒரு அரசியல் அமைப்பை நடத்தும் வை.கோ.வுக்கே இந்தத் துணிச்சல் இருக்குமானால், தேர்தல் அரசியலில் பங்கேற்காத மாற்று அரசியலில் ஆர்வமுள்ள இயக்கங்கள், தோழர்கள், இளைஞர்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

Tuesday, November 29, 2011

கொளத்தூர் - புலியூரில் கவிஞர் அறிவுமதி தலைமையில் மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு இந்தியாவில் 1984 ஜனவரி முதல் 1986 நவம்பர் வரை ஏறத்தாழ 3 ஆண்டுகள் சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே உள்ள கும்பாரப்பட்டி, புலியூரில் ஆயுதப்பயிற்சி நடைபெற்றது. முகாமிற்கு தலைமைப் பொறுப்பேற்று பயிற்சி அளித்தவரும், இலங்கையில் நவாப்புலி இராணுவ முகாமை தாக்கச் செல்ல 14,02,1987 இல் கைத்தடியில் கரும்புலிகளுக்குப் பயிற்சிஅளிக்கும்போது நடந்த விபத்தில் வீரமரணம் எய்தியவருமான தளபதி பொன்னம்மான் நினைவாக புலியூர்பிரிவில் கொளத்தூர் பகுதிபொதுமக்களால் பொன்னம்மான் நினைவு நிழற்கூடம் எழுப்பப்பட்டது.

அந்த தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் 27.11.11 அன்று மாலை 06.05 மணியளவில் பெரியார் திராவிடர் கழக சேலம் மாவட்டத்தலைவர் கி.முல்லைவேந்தன் தலைமையில் தாயக மாவீரர் பாடல் ஒலிக்க தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மறைந்த மாவீரர்களுக்கு கவிஞர் அறிவுமதி முதன்மை சுடரை ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்.

கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அண்ணன் அவர்களைத் தொடர்ந்து கொட்டும் மழையிலும் குழந்தைகள் பெண்கள் உட்பட தொடர்ந்து அங்கு கூடியிருந்த 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈகச்சுடர் ஏற்றி மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கத்தைச் செலுத்தினர். தோழர் சமர்ப்பா குமரன் எழுச்சி இசையைத் தொடர்ந்து கி.முல்லைவேந்தன், டைகர் பாலன், கனகரத்தினம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக கவிஞர் அறிவுமதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

பயிற்சி காலத்தில் புலியூர் பகுதி பொதுமக்களிடம் புலிகள் எவ்வளவு நெருக்கமாக வாழ்ந்தனர், நாட்டில் தேசியத் தலைவர் அவர்கள்போராளிகளை எப்படி தாய் உள்ளத்தோடு வழிநடத்திச்சென்றார், சிங்கள இராணுவத்தினர் புலிகளிடம் சிறைபட்டால் அவர்களை சிங்களவனைப் போல சித்ரவதை செய்யாமல் எப்படி மரியாதையுடன் நடத்தினார்கள் என்பவற்றையெல்லாம் விளக்கி விரிவுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சி இப்பகுதியில் 1990 முதல் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்.















Friday, October 14, 2011

மண்ணுக்கான விடுதலை அல்ல... மக்களுக்கான விடுதலையே தேவை! - தோழர் கொளத்தூர் மணி.

வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன்.


''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?''
''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.''
''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?''


''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட்டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார்கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.''
'' 'திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?''


''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.''


''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?''


''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங்கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான்.


மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.''


''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?''


''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''


''பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? ஈழத் தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன மாதிரியான தீர்வுகளை முன்வைக்கிறீர்கள்?''


''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!''

நான்றி :- ஆனந்த விகடன்.

Wednesday, September 28, 2011

‘யாருக்கும் வேண்டாம் தூக்கு; மரண தண்டனையை நீக்கு’ புதுவை குலுங்கியது

புதுவையில் மரண தண்டனைக்கு எதிரான பரப்புரைப் பயணம் எழுச்சியுடன் நடந்தது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு கருத்துகளைக் கேட்டு தங்கள் பேராதரவை வழங்கினர். புதுவை மாநிலத்தின் 11 பகுதிகளில் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10.30 மணி வரை பரப்புரை வெற்றிநடை போட்டது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், பரப்புரைக் குழுத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், புதுவை மாநில கழகத் தலைவர் லோகு. அய்யப்பனுக்கு ஆடைகள் போர்த்தி பயணக் குழுவை வரவேற்றனர். 3 தமிழர் உயிர் காப்போம் என்ற அறிவிப்புப் பதாகை, ஒலி பெருக்கிக் கருவிகளுடன், ஒரு வாகனம் முன் செல்ல தொடர்ந்து 150 இரு சக்கர வாகன த்தில் தோழர்கள் அணி வகுக்க பேரணி போல் சென்ற பரப்புரைப் பயணம் புதுவையை ஈர்த்தது. முருகன், பேரறிவாளன், சாந்தனை விடுதலை செய் என்று அச்சிடப்பட்ட வெள்ளை பனியன்களை தோழர்கள் அணிந்து வந்தனர்.


புத்தன் கலைக் குழுவினர், முன் கூட்டியே நிகழ்ச்சி நடக்கும் பகுதிக்குச் சென்று பறை இசை ஒலித்து, தூக்குத் தண்டனைக்கு எதிரான பாடல்களை பாடுவர். பரப்புரைக் குழுவினர் பின் தொடர்ந்து வந்து திரண்டிருந்த மக்களிடம் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். கழக வெளியீடுகளான ‘மரண தண்டனையை ஒழிப்போம்’, ‘காந்தியார் கொலையில் பார்ப்பன பின்னணி’ என்ற நூல்களை கழகத் தோழர்கள் கூடி நிற்கும் மக்களிடமும், பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனங்களிடமும் விற்பனைக்கு எடுத்துச் செல்வர். மற்றொரு பிரிவினர், மரண தண்டனைக்கு எதிரான துண்டுப் பிரசுரங்களை வழங்குவார்கள். மற்றொரு பிரிவினர், உண்டியல் ஏந்தி மக்கள் தரும் நன்கொடைகளைப் பெற்று கொள் வார்கள். கொளுத்தும் வெய்யிலில் மனித உரிமைக்காக மூன்று தமிழர்களின் உயிர்காப்பிற்காக மரண தண்டனையையே வேண்டாம் என்பதற்கான நியாயங்களை, மக்களை சந்தித்து விளக்கிய இந்தக் காட்சிகள், உணர்ச்சிகர மானவையாகும். உலகிலேயே மரண தண்டனைக்கு எதிரான இப்படி ஒரு மக்கள் இயக்கம் நடந்திருக்க முடியாது என்றே கூறலாம். சிந்தனையாளர்கள் மனித உரிமையாளர்களின் கருத்துகளாகவே முடங்கி நின்ற மரண தண்டனைக்கு எதிரான கருத்தை மக்கள் கருத்தாக மாற்றும் முதல் முயற்சி தமிழகத்தில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.


23.9.2011 காலை 10 மணிக்கு மதகடிப்பட்டு பகுதியில் பயணம் தொடங்கியது. புத்தன் கலைக் குழுவினர் பறை இசை பாடல்களோடு தொடங்கிய பயணத்தில், புதுவை மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். 10.30 மணிக்கு திருபுவனை வந்து சேர்ந்தது. புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை அமைப்பாளர் மூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர்.


பகல் 11.15 மணியளவில் பயணக்குழு கண்டமங்கலம் வந்தது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கொளத்தூர் மணி பேசினார். பாட்டாளி மக்கள் கட்சித் தோழர்கள், தலைவர், பொதுச்செயலாளருக்கு ஆடை போர்த்தி வரவேற்று ரூ.1000 நன்கொடை வழங்கினர்.


பகல் 12 மணியளவில் வில்லியனூர் வந்து சேர்ந்தது. லோகு அய்யப்பன், புதுவை மாநில ம.தி.மு.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நா.மணிமாறன், விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். புதுவையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, கழகத் தலைவர் கொளத்தூர் மணியை இழிவுபடுத்திப் பேசியதற்கு நா. மணிமாறன் கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரசாரை கடுமையாக எச்சரித்தார்.


பகல் ஒரு மணிக்கு பயணக் குழு கரிச்சலாம்பாக்கம் வந்து சேர்ந்தது. பட்டாசு வெடித்து பயணக்குழுவினருக்கு ஆடை போர்த்தி எழுச்சியான வரவேற்பு தரப்பட்டது. கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து லோகு அய்யப்பன், கொளததூர் மணி பேசினர்.


1.50 மணிக்கு பயணக்குழு பாகூர் வந்தது. பறை இசையுடன் கருத்துப் பாடல்களை புத்தன் கலைக் குழுவினர் பாடினர். அரியாங்குப்பத்தில் தோழர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.


மாலை 4.45 மணியளவில் அரியாங்குப்பத்திலிருந்து பயணக் குழு பிற்பகல் பரப்புரையைத் தொடர்ந்தது. அம்பேத்கர் சுமை தூக்குவோர் சங்கத்தின் சார்பில், கைத்தறி ஆடைகளை பயணக் குழுவினருக்கு அணிவித்தனர். கொளத்தூர் மணி பேசினார்.


5.30 மணிக்கு முதலியார் பேட்டையிலும், 6.10 மணிக்கு ரெட்டியார்பாளையத்திலும் பரப்புரையை முடித்துக் கொண்டு மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது. தட்டாஞ்சாவடி நாம் தமிழர் கட்சித் தோழர்கள் பயணக் குழுவினருக்கு தேனீர் வழங்கினர். இரவு 7 மணிக்கு முத்திரையர்பாளையத்தில் நடந்த நிகழ்வில் லோகு அய்யப்பன், கொளத்தூர் மணி உரையாற்றினர்.


இறுதியாக 7.40 மணிக்கு சாரம் பகுதியிலுள்ள ஜீவா சதுக்கத்துக்கு பயணக் குழு வந்து சேர்ந்தது. புத்தன் கலைக் குழுவினர் தங்கள் கலை நிகழ்ச்சிகளை முழுமையாக நடத்தினர். மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிரை வழங்கிய செங்கொடி பற்றிய வீரவணக்கப் பாடல்; ‘உயிர்’ எனும் நாடகத்தை நிகழ்த்தினர். தொடர்ந்து பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ராஜீவ் கொலை விசாரணை ஆணையங்களையும் இந்திரா கொலை பற்றிய விசாரணை ஆணையத்தையும் காங்கிரசாரே முடக்கி, உண்மைகள் வெளியே வராமல் தடுத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற மேற்கொண்ட சூழ்ச்சி, சதி, துரோகங்களையும் விரிவாக விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து தூக்குத் தண்டனைக்கு எதிரான வீதி நாடகங்களை கலைக் குழுவினர் நடத்தினர். இறுதியாக கொளத்தூர் மணி தூக்குத் தண்டனைக்கு எதிரான நியாயங்களை முன் வைத்தும், காங்கிரசாரை எச்சரித்தும் ஒரு மணி நேரம் பேசினர். தோழர் வீராசாமி நன்றியுரையுடன் உணர்வுகளை சூடேற்றிய நிகழ்வு 10.30 மணிக்கு நிறைவடைந்தது. சதுக்கத்திலேயே தோழர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.


இந்தப் பயணம் புதுவையில் நினைவில் நிற்கும் பயணமாக அமைந்தது. “மூவர் தமிழர் உயிர்காப்பு இயக்க வரலாற்றில் இந்தப் பயணம் இடம் பெறும்; என்றென்றும் புதுவை கழக வரலாற்றில் நினைவு கூறப்படும்” என்று விடுதலை இராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டார்.
செய்தி: புதுவை வேலழகன்

Sunday, September 25, 2011

சோதிடத்தைச் சொல்லியடிக்கும் ‘வெங்காயம்’

இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையல்ல, உண்மைச் சம்பவங்களே’ என்ற உறுதிமொழியுடன் தொடங்குகிறது ‘ வெங்காயம் ‘ திரைப்படம்.


அதற்கேற்ப உண்மைகளை உள்ளபடியே போட்டு உடைத்திருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். புராணம், இதிகாசம், கடவுள், சொர்க்கம், நரகம், சோதிடம், ராசிபலன், மூடநம்பிக்கை போன்ற கட்டுக்கதைகளை அதாவது ஒன்றுமில்லாதவற்றை வெங்காயம் என்று பெரியார் கூறுவார். இல்லாத சோதிடத்தைச் சொல்லி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் எத்தர்களைத் தோலுரித்துக் காட்டும் படத்திற்கு வெங்காயம் என்று பொருத்தமான பெயர் சூட்டியதற்காக நம்முடைய முதல் பாராட்டு.

ஒரு கிராமத்தில் திடீர் திடீரென்று சாமியார்களும், சோதிடர்களும் காணாமல் போகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதைச் சொல்லுவதுதான் கதை. ஒரு மையக் கதையோடு இணைந்த இரண்டு கிளைக்கதைகள் பின்கதையாக வருகின்றன. படத்தின் தொடக்கக் காட்சியே கிராமத்து வெள்ளந்தி மனிதர்களிடம் இருந்து தொடங்குகிறது. படுக்கையில் படுத்தபடியே, கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் செல்போனை வைத்துக் கதாநாயகன் பேசிக் கொண்டிருக்க (இப்படி பிசாசு பிடித்தவர்கள் நிறையபேரைச் சாலைகளில் பார்க்கலாம்), அவனுக்குப் பிசாசு பிடித்திருப்பதால்தான் தனக்குத் தானே பேசிக் கொள்கிறான் என்று வீட்டிலிருப்பவர்கள் திருநீரும், வேப்பிலையும் கொண்டு பேயோட்டுவது கிராமத்துக் கலகலப்பு.


காணாமல் போன சாமியார்களைக் கண்டுபிடிக்க வேண்டிய காவல் அதிகாரி அன்புமணி - கதாநாயகன். பக்கத்து கிராம விவசாயின் மகள் செந்தமிழ் - கதாநாயகி . கிராமத்துக் குறும்புக்காரி. பக்கத்து ஊருக்குப் பால் ஊற்றச்செல்லும் போது, தெருவில் குளித்துக் கொண்டிருக்கும் சிறுவனைப் பார்த்து, ‘ டேய் மாப்ள என்னடா இது, அத்த வரும்போது அம்மணமா குளிச் சிட்டிருக்க. ச்சீ..ச்சீ.. நா ஒனக்குப் பொண்ணு தரமாட் டேம்பா… ‘ எனக் கிண்டல் அடிக்க, சிறுவன் பாதிக் குளியலில் தெருத் தெருவாக ஓட, அவனுடைய அம்மா அவனை விரட்டிச் செல்லும் காட்சி நல்ல நகைச்சுவை மட்டுமன்று, கிராமங்களில் இயல்பாக நடக்கும் சேட்டையும் கூட. வம்புச் சண்டையில் தொடங்கி, காதலாக மாறுகிறது செந்தமிழ் ‡ அன்புமணி சந்திப்பு. அதைத் தொடரும் கிராமத்துக் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கின்றன.


காணாமல் போன சாமியாரின் ஊருக்கு விசாரணைக்காக வரும் காவல்துறை வண்டியின் மீது ஒரு பைத்தியக்காரக் கிழவி கல்லை எடுத்து வீசுகிறார். அவரைத் திட்டி அனுப்பிவிட்டு, அந்தச் சாமியாரின் மனைவி, கிழவியின் கதையைக் காவல் அதிகாரி அன்புமணியிடம் சொல்கிறார். கிழவியும், அவளது பேரனும் களியும், பருப்புக் குழம்பும் சாப்பிடும் நிலையிலிருந்தாலும், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் அளவுக்கதிகமாக அன்பு வைத்திருக்கும், அவர்களது வாழ்க்கையில் சோதிடம் குறுக்கிடுகிறது. நண்பனோடு சேர்ந்து சொந்தமாகத் தறி போட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைக்கும் அவன் ஒரு சோதிடரைப் பார்க்கப் போகிறான். அந்தச் சோதிடரோ, இவனுடைய நண்பனுக்கு நேரம் நன்றாக இருக்கிறது என்றும் இவனுக்கு எட்டாம் இடத்தில் சனி அதாவது அட்டமச் சனி என்றும் கூறிவிடுகிறார். இதனால் இவனோடு தொழில் தொடங்க நண்பன் மறுத்துவிட, கடைசியில் தற்கொலை செய்துகொள்கிறான். பாட்டிக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது. அந்த சோதிடர் கடத்தப்படுகிறார். இதே போன்று இன்னும் மூன்று சாமியார்களும் அடுத்தடுத்துக் கடத்தப்படுகிறார்கள்.


காவல்துறை விசாரணை மெல்ல மெல்ல, சிறுவர் காப்பகத்தில் இருந்து காணாமல் போன மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமியை நோக்கி நகர்கிறது. மூன்று சாமியார்களையும் கடத்தியது அந்தச் சிறுவர்கள்தான் என்று தெரிய வரும்போது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும், அந்த சோதிடர்களால் தங்கள் குடும்பத்தையும், மகிழ்ச்சியையும் தொலைத்தவர்கள் என்று தெரியவரும்போது சோதிடர்களின் மீது நம்முடைய கோபமும் குவிகிறது. சோதிடரின் பேச்சை நம்பி, தந்தையால் சந்தேகப்பட்டு அடித்து விரட்டப்படும் தாய் தற்கொலை செய்து கொண்டதால் சிறுவர் காப்பகத்திற்கு வந்து சேரும் சிறுவன், நரபலி சாமியாரினால் கூத்துக் கலைஞரான தந்தையையும், அன்பான தம்பியையும் இழந்து அநாதையான பூ விற்கும் சிறுமி எனப் பாதிக்கப் பட்டவர்கள் ஒன்றுசேர்ந்து சாமியார்களைக் கடத்துகின்றனர். எல்லாம் தலைவிதிப்படி நடந்திருக்கிறது என்று நம்பி, மனத்திற்குள் அழுது கொண்டிருக்கும் அவர்கள், தங்கள் சிறுவர் காப்பகத்திற்கு வருகை தரும் நடிகர் சத்தியராஜின் பகுத்தறிவுப் பேச்சினால், உண்மையை உணர்கின்றனர். சோதிடத்தின் பெயரால் தங்களின் வாழ்வு எப்படியயல்லாம் சிதைக்கப்பட்டிருக்கிறது என்று சிந்திக்கின்றனர். சாமியார்களைக் கடத்தி காட்டுக்குள் இருக்கும் மண்டபத்தில் கட்டிப் போடுகின்றனர்.


இடையில், செந்தமிழ் ‡ அன்புமணி காதலுக்கு இரு வீட்டிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டுத் திருமணத்திற்கும் நாள் குறிக்கப்படுகிறது. செந்தமிழுக்குச் செவ்வாய் தோ­ம் இருப்பதால், பரிகாரம் செய்வதற்காக அவளது பெற்றோர் ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அங்கே அந்தச் சாமியார் மயக்க மருந்து கொடுத்து அவளை பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்த, குத்துவிளக்கில் தவறி விழுந்து உயிரிழக்கிறாள் செந்தமிழ். அந்தச் சாமியாரையும் சிறுவர்கள் கடத்திச் செல்கின்றனர். கடத்தியவர்கள் யார் என்பதையும், அவர்களின் இருப்பிடத்தையும் கண்டுபிடித்துவிட்ட அன்புமணி, சாமியார்களை மீட்கச் செல்கிறார்.


இறுதிக்காட்சியில், சாமியார்களிடம் அந்தச் சிறுவர்கள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. சோதிடப் புரட்டுகளைப் புட்டுப்புட்டு வைத்து, அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் சோதிடர்கள் வியர்வையில் குளித்து, விக்கித்துப்போய் நிற்கின்றனர். வயதுக்கு மீறிய பேச்சுக்கள் போன்று தோன்றுகிறது என்றார் ஒரு நண்பர். அறிவு என்பது வயதை அடிப்படையாகக் கொண்டதன்று. அதிலும் பகுத்தறிவுக்கு கேள்விகேட்கும் தன்மையும், உண்மையை அறிய முயலும் தேடலும்தான் தேவையே தவிர, வயது தடையில்லை. பட்டறிவுதான் உண்மையைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியன். அந்தவிதத்தில், அந்தச் சிறுவர்களின் வலியும், வேதனையும், அவர்களுக்குள் கேள்விகளாய் முளைத்துச் சிந்திக்க வைத்திருக்கலாம். அவர்கள் சந்தித்த பகுத்தறிவுவாதியின் விளக்கங்களும் அவர்களின் தேடலைத் தீவிரப்படுத்தி யிருக்கக் கூடும்.


இனியாவது திருந்தி வாழுங்கள் என்று சாமியார்களை மன்னித்து விடுதலை செய்யும் சிறுவர்களைச் சாமியார்கள் கொல்ல முயல, அங்கு வரும் காவல் அதிகாரி அன்புமணி, சாமியார்களைச் சுட்டுக்கொன்று சிறுவர்களைக் காப்பாற்றுகிறார்.


கூத்துக் கலைஞராக வருபவர் இயக்குனரின் தந்தை மாணிக்கம் என்பது தெரிந்தபோது வியப்பாக இருந்தது. பரம்பரைக் கூத்துக் கலைஞரைப் போல, அவ்வளவு இயல்பாக நடித்திருந்தார். மகனின் மருத்துவச் செலவுக்காக, தெருவில் கூத்துக்கட்டும் போது கலையை நேசிக்கும் கலைஞனின் சுயமரியாதையும், தந்தையின் பாசமும் வெளிப்படுகிறது. இவரைப் பற்றிய கூடுதலான ஒரு செய்தி, இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். மகனின் இலட்சியத்திற்கு வடிவம் கொடுத்த தந்தையாகவும் நம்முடைய மரியாதைக்குரியவராகிறார். பேரனாக வரும் இயக்குனர் ராச்குமார் பாசக்காரப் பட்டிக்காட்டுப் பேரனாக அசத்தியிருக்கிறார்.


கதை மட்டுமன்று, பாடல்களும் நல்ல பல கருத்துகளைச் சொல்கின்றன. கருப்புச் சட்டைக்காரர்களான, கவிஞர் அறிவுமதியும், பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். இவர்களோடு இயக்குனரின் தந்தை எஸ்.எம். மாணிக்கம், இயக்குனர் ராச்குமார் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். அறிவுமதி எழுதிய ‘ அரைக் கிறுக்கன் ‘ பாடல் இளைஞர்களை முணுமுணுக்க வைக்கும். ‘ அச்சமென்ன அச்சமென்ன… ‘என்ற பேரா. சுபவீயின் பாடல் குழந்தைகளுக்குப் பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்கிறது. திரைப்படத்தில் இதுபோன்ற பகுத்தறிவுக் கருத்துகளைச் சொல்லுவதற்கு கண்டிப்பாகத் துணிச்சல் வேண்டும். காரணம், பணம் சம்பாதிப்பதற்கான பொழுதுபோக்கு ஊடகம் என்ற எண்ணமே பெரும்பாலானோரிடம் மேலோங்கி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஊடகத்தின் வாயிலாக பெரும்பான்மை நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் கதையைச் சொல்லும் இயக்குனரின் கொள்கை உறுதி பாராட்டிற்குரியது. முதல்படம் என்பதால், சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகளும் படத்தில் இருக்கின்றன. கதை, கருத்தாழமிக்க பாடல்கள், எழிலார்ந்த கிராமத்துப் பசுமைக் காட்சிகள் ஆகியவற்றை முன்னிறுத்தி அந்தக் குறைகளை மறக்கலாம். பிரபல நாளேடுகளின் பாராட்டுக்கள், இயக்குனரின் துணிவுக்கும், உண்மையைப் பேசும் படத்தின் கதைக்கும் கிடைத்த பெருமை என்றே சொல்லலாம். மிகக் குறைந்த செலவில், நல்ல கருத்தாழமிக்கப் படத்தை, அதுவும் தன் முதல்படமாகத் தந்திருக்கும் இயக்குனருக்கு மீண்டும் நம்முடைய பாராட்டுக்கள்.

Sunday, August 28, 2011

சகோதரி செங்கொடி தூக்குக்கு எதிராக தீக்குளிப்பு

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் சகோதரி செங்கொடி தீக்குளித்து இறந்தார்.
காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.
இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார்.

இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.
21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Sunday, July 17, 2011

‘கல் முதலாளிகள்’

நாடு மக்களுக்கு சொந்தம் என்பதுதான் உலக நியதி. ஆனால், நாட்டை கோயிலுக்கு உரிமையாக்கியதுதான் பார்ப்பனியம். திருவாங்கூர் சமஸ்தானமே பத்மநாப சாமிக்கே சொந்தமாம். அப்படித்தான் அந்த சமஸ்தானத்தின் மன்னராக இருந்த மார்தண்ட வர்மா, தனது மரணத்தின் போது தமது குடும்ப வாரிசுகளிடம் கூறினாராம்.

திருவனந்தபுரம் பத்மநாபன் கோயில் சுரங்கத்தில் புதைந்து கிடக்கும் தங்க ஆபரணங்களின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகம் என்று செய்திகள் வருகின்றன. உலக கத்தோலிக்கர்களின் தலைமை பீடமான போப் ஆட்சி செய்யும் வாடிக்கன்’ (இது ஒரு தனி நாடு) சொத்தையும் விஞ்சி நிற்கிறது - திருவனந்தபுரம் கல் முதலாளி பத்மநாபனின் சொத்து. இந்தியாவிலுள்ள பல கோயில்களில் இப்படி பல லட்சம் கோடி முடங்கிப் போய்க் கிடக்கிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.42,000 கோடி; பூரி ஜெகநாதன் வசம் 90 கோடி; சாமியார்கள், ‘பாபாக்களின் ஆசிரமங்களில் பல்லாயிரம்கோடி. புட்டபர்த்தி சாய்பாபா செத்துப் போன வுடன் அவரது அறையிலிருந்து கோடி கோடியாக பணம் கடத்தப்படுகிறது.

இதுதான் பார்ப்பன இந்தியா

சுரங்கத்துக்குள் புதைந்து கிடக்கும் லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள ஆபரணங்களை அப்படியே சுரங்கத்துக்குள் போட்டு மூடிவிட வேண்டும். அதை மக்களுக்கு பயன்படுத்துவது தெய்வ குற்றம்என்கிறார், கொலை வழக்கு விசாரணையில் உள்ள காஞ்சி ஜெயேந்திரன். திருவிதாங்கூர் மன்னர்களின் வாரிசுகள் தொடர்ந்த வழக்கில் இந்த சொத்துக்களை வேத பாடசாலைபோன்ற அமைப்புகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மக்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று கோரியுள்ளனர்.


கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி சொத்துக்களை மக்களுக்கு செலவிடக் கூடாது என்று கூறுகிறவர்களை நாம் கேட்கிறோம் - இந்த உடைமைகள் மக்களிடமிருந்து வந்தது தானே? மக்கள் காணிக்கையாகத் தந்தது தானே! கடவுள்களா இந்த உடைமைகளைக் கொண்டு வந்தன?

முதல் போட்டு உழைப்பாளர்களைச் சுரண்டும் முதலாளிகூட முதலீடு செய்ய வேண்டும்;தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்தாக வேண்டும். ஆனால் முதல் போடாமலேயே மக்களின்அறியாமையைச் சுரண்டும் கல் முதலாளிகளான கடவுள்களால் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்தார்களே தவிர, மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? ‘கல் முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து குரல் கொடுத்த தலைவர் பெரியார், கூழுக்கு ஏழை அழும்போது, பாழும் கல்லுக்கு பாலாபிஷேகம் ஏன், என்று கேள்வி எழுப்பியதுதான் சுயமரியாதை இயக்கம்.


கோயில் வழிபாடு என்பதே பார்ப்பனருக்கு உரியது அல்ல. பார்ப்பனர்கள் நெருப்பை வழிபட்டவர்கள். அதனால்தான் பார்ப்பனர்கள் மட்டுமே அக்னிஹோத்ரிகள்என்று அழைக்கப்பட்டனர். பார்ப்பனர்கள் யாகங்களை மட்டுமே நடத்தி வந்தவர்கள். யாகம் நடத்துவதும், ‘அக்னியை வணங்குவதும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உள்ள உரிமை என்றாகிவிட்டதால், ஏனைய பார்ப்பனரல்லாதவர்கள் புத்தமதத்தில் உருவான மடாலயங்களைப் பார்த்த பிறகு கோயில்களை உருவாக்கத் தொடங்கினர். கரையான் புற்றெடுக்க கருநாடகம் குடிபுகுந்தது போல்பிற்காலத்தில் கோயில்களில் குவிந்த செல்வத்தினால் பார்ப்பனர்கள் தங்கள் வேதகால கடவுள்களானஅக்னி,இந்திரன், வருணன் போன்றவற்றுக்கு விடை கொடுத்துவிட்டு கோயில்களை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விட்டனர். கடவுளுக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரியும், கடவுள்பிராமணர்களை மட்டுமே ஏற்றுக் கொள்வார் என்று அறிவித்து, கடவுளை தங்களது மந்திரத்துக்குமட்டுமே கட்டுப்பட்டவராக்கிக் கொண்டார்கள். கடவுளுக்கு எந்த சக்தியும் இல்லை என்று பார்ப்பனர்களுக்கு நன்றாகவே தெரியும்.

நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறைஅமைக்கப்படும் வரை, கோயில்களின் சொத்துக்கள், செல்வங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் தனி உடைமைகளாகவே இருந்தன. பார்ப்பனர்கள் தான் அவற்றை அனுபவித்தார்கள். கோயில்களில் பார்ப்பனரைத் தவிர, பிற சாதியினரை நுழைய அனுமதித்த பார்ப்பனர்கள் கோயிலுக்குள் தேவதாசிகளாக பெண்களை நியமித்துக் கொண்டு கோயில்களில் பெண்களுடன் பாலுறவு கொள்வதை புனிதமாக்கி, “வேஸ்யா தர்சனம்; புண்யம், பாபநாசனம்என்று அதற்கு மந்திரத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள்.


கோயிலுக்குள் நுழைய முடியாத பிறசாதியினர், வீதியிலிருந்து தரிசிப்பதற்காகவே கோபுரங்களை கட்டி, அதில், கடவுள் பொம்மைகளை வைத்தனர். இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கத் திமிரின் சின்னமாகவே இந்த ஆகம கோயில்கள் விளங்குகின்றன.


திருவாங்கூர் சமஸ்தானம் என்பது பார்ப்பனர்களின் வர்ணாஸ்ரம கோட்டையாகவே திகழ்ந்திருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த மண்ணின் மைந்தர்கள் தான், அங்கே அரசர்கள். ஆனால் பார்ப்பனர்களின் அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள்.கிராந்திஎன்ற உருது பத்திரிகை,சாதியை எதிர்த்து எழுதியது என்பதால், அங்கே நடந்த மன்னராட்சி, அந்த ஏட்டுக்கு தடை போட்டது. கோயில் சொத்துகள் எல்லாம் பார்ப்பனரே அனுபவிக்க, மன்னராட்சி அனுமதித்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனியே ஒட்டுப்புராஎன்ற பெயரில் சாப்பாடு கூடங்களை உருவாக்கி, இலவசமாக அவர்களுக்கு மட்டும், மன்னர்கள் சாப்பாடு போட்டு வந்தார்கள். அதற்கு பல லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பிற சாதியினர் பட்டினியால் தவித்தாலும் அங்கு போய் சாப்பிட முடியாது. பார்ப்பனர்கள் வீதியில் நடக்கும்போது சத்தம் எழுப்பிக் கொண்டே போவார்கள். சத்தம் கேட்டால், மற்ற சாதியினர் வீதிகளில் வந்தால், ஓடி மறைந்து கொள்ள வேண்டும்.


திருவிதாங்கூர் சமஸ்தான கோயில்களில் காந்தி, லாலா லஜபதிராய் போன்ற தலைவர்கள் தரிசனத்துக்குப் போனபோது அவர்கள், ‘கடற்பயணம்செய்தவர்கள் என்று காரணம் காட்டி,பார்ப்பனர்கள் அனுமதி மறுத்தார்கள். அந்த சமஸ்தானத்துக் கோயிலில் தான் இப்போதுபுதையல்கள்வெளியே வந்திருக்கின்றன. இப்போதும் பார்ப்பனர்கள் அதே வர்ணத் திமிரோடுமக்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று எதிர்க்கிறார்கள்.


கேரளத்தில் ஆட்சியிலிருந்த பொதுவுடைமை கட்சி கூட இந்த சொத்துகளை மக்கள் உடைமையாக்க வேண்டும் என்று கூற அஞ்சுகிறது. இதில் பா.ஜ.க.வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்,ஒரே நிலை எடுப்பதுதான் வேடிக்கை. இவர்கள் தான் இந்த நாட்டில் புரட்சியை கொண்டு வரப் போகிறார்களா?

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள பல்லாயிரம் கோடி திருட்டுப் பணத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்று முழங்கும் ஊழல் எதிர்ப்பாளர்களும் சரி, உச்சநீதிமன்றமும் சரி,கோயிலுக்குள் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடி உடைமைகளை மக்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறத் தயங்குவது ஏன்? வறுமைக் கோட்டுக்குக் கீழே 50 சதவீதத்துக்கும் அதிகமாக மக்கள் வாழ்வதாகக் கூறப்படும் ஒரு நாட்டில் கல் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ஆபரணங்களும், சொத்துகளும் தேவை தானா?


கடவுள்என்ற அச்சத்தைக் காட்டியே இப்படி நாட்டைச் சுரண்டிக் கொண்டிருக்கும் நிலையில் கடவுள் மறுப்பை பேசாமல் இருக்க முடியுமா? பகுத்தறிவு சிந்தனை வெகு மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டிருக்கு மானால், இப்படி கல் முதலாளிகள்பெயரில் சொத்துகள் முடக்கப்படும் நிலை தொடருமா? பகுத்தறிவு கருத்துகளைப் பரப்புவதற்கு - பொதுவுடைமையாளர்களும், ‘புரட்சிக்கட்சிக்காரர்களும் முன் வராமல், ஒதுங்குவது ஏன்?


பார்ப்பான் ஆதிக்கமும், கல் முதலாளிகள் சுரண்டலும் இப்பொழுதும்தொடருகிறது என்பதையேபத்மநாபன் சுரங்கக் கதைகள்உறுதிப்படுத்துகின்றன.

Saturday, July 2, 2011

அன்னூரில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் உரிமைப் போராட்டம் வெற்றி







27-6-2011 அன்று அன்னூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்…..

இந்த அன்னூர் பகுதியில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக, நடந்துகொண்டிருக்கிற இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிற அனைத்து அமைப்புகளின் தலைவர்களே! வருகை தந்திருக்கிற அன்பு தோழர்களே! உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்னூர் பகுதியில் நடந்துவரும் தீண்டாமை கொடுமை, அவ்வப்போது அதற்கு வருகிற எதிர்ப்புகளையெல்லாம் மீறி, மீண்டும் தொடர்ந்துகொண்டிருப்பதை நாம் காண்கிறோம். சில மாதங்களுக்கு முன்னால், அங்கிருக்கிற ஒரு கல்வெர்ட்சுவரின் மீது சட்டையோடு அமர்ந்திருந்தார்கள் என்பதற்காக சிலர் தாக்கப்பட்டுள்ளனர். முடி திருத்த மறுக்கிறார்கள். தேனீர் கடைகளில் இரட்டை குவளை. இந்த கொடுமைகள் எல்லாம் நீடிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதற்கு, வழக்குகள் தொடுக்கப்பட்டன. போராட்டங்கள் நடத்தப்பட்டன.

கடந்த மே மாதம் 21 ஆம் நாள் பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் ஆர்பாட்டம் இங்கு நடந்தது. எந்தெந்த பகுதிகளில் என்னென்ன வடிவங்களில் தீண்டாமை இருக்கிறது என்பதை, அந்த போராட்ட துண்டறிக்கையில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தார்கள். குறிப்பாக குறுக்கிளையம்பாளையம் கோவிந்தன் தேனீர் கடையில் இரட்டை குவளை இருக்கிறது. பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்க தடை இருக்கிறது. நல்லிசெட்டிபாளையத்தில் ஊர்கவுண்டர் தேனீர் கடையில் இரட்டை குவளை இருக்கிறது. பழனிசாமி தேனீர் கடையில் இரட்டை குவளை இருக்கிறது. அக்கரைசெங்கப்பள்ளி சேகர் கடையில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிதிருத்த மறுக்கப்படுகிறது. அழகர் பாளையம் ராமசாமி கடையில் தனிக் குவளை இருக்கிறது. இவைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் என்பதற்காக கடந்த மாதம் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

காவல் துறையோ, அரசு அதிகாரிகளோ உரிய நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத்தான், இந்த போராட்டத்தின் தேவை ஏற்பட்டிருக்கிறது. தண்ணீர் பிடிக்கத் தடை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகள் வினியோகித்திருக்கிறார்கள். தண்ணீர் பிடிக்க தடை இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, ஆர்பாட்டத்தில் உரை ஆற்றிருக்கிறார்கள். பூசிமெழுகும் அதிகாரிகளின் அலட்சியபோக்குதான், இப்படிபட்ட தீண்டாமை நிலவுவதற்கு காரணமாயிருக்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு பெரியார் திராவிடர் கழகம் இரட்டைகுவளைகளுக்கு எதிராக போராட்டம் எடுத்தபோது, சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐ.ஜி சொன்னார்…… “தமிழ்நாட்டில் தீண்டாமையே இல்லை, அரசியலில் ஆதாயம் தேடும் சிலர் இப்படி சொல்கிறார்கள்’….என்று, இவர்தான் சமத்துவ தேனீர் விருந்து வைப்பதற்காக என்று, எழுபத்தி இரண்டு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி கொண்டார். அதே நிலையைதான் இப்போது பார்க்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்னாள், கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அங்கு தீண்டாமை கொடுமைகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இந்த பகுதியின் மனித உரிமை பிரிவு உதவி ஆய்வாளர் தீண்டாமை இல்லை என்று சொல்லியதாக கோட்டாட்சியரே பதிவு செய்திருக்கிறார். இதை படித்துக் காட்டினால் தான் இந்த அதிகாரிகளின் யோக்கியதை தெரியும். (படிக்கிறார்)…………

“அன்னூர் காவல் ஆய்வாளர், மற்றும் சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவு உதவி ஆய்வாளர், அன்னூர் உள்வட்டத்தில் இரட்டை குவளை மற்றும் முடி திருத்த நிலையங்களில் தீண்டாமை போன்ற நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறுவதில்லை என்றும், இது தொடர்பாக தனிபட்ட நபர்கள்மீது எந்தவித புகார்களும் வரவில்லை என்றும், அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப்பட்ட நபர்கள் உரிமை பிரச்சினை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது”. இது கோட்டாட்சியர் எழுதிகொடுத்த அறிக்கை, இவர்கள் பனியாற்றும் லட்சணம் எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அந்த நண்பரை நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே தணிக்கை செய்தீர்களா? அல்லது அறையில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை எழுதினீர்களா? என்பதுதான் எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் நடவடிக்கை எடுத்துத்தொலையாவிட்டாலும் பரவாயில்லை. இல்லை என்று ஏன் மறுதலிக்கிறீர்கள்?.

கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தெளிவாக ஒரு தீர்ப்பை சொல்லியிருக்கிறது. ஆறுமுகசேர்வை என்பவர் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட ஒருவரைப் பார்த்து ஜாதிபெயரை சொல்லியதாக வழக்கு. தண்டனைப் பெற்ற ஆதிக்கச் சாதிகாரன் உச்சநீதிமன்றம் வரை சென்றான். அங்கு தண்டனையை உறுதிசெய்ததோடு நீதிபதி நிற்கவில்லை. தமிழ்நாட்டில் பல கிராமங்களில் இரட்டை குவளை இருப்பதை அறிந்து நாங்கள் வருந்துகிறோம், இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்தும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், மாவட்ட ஆட்சியரையும், மாவட்ட காவல் கண்கானிப்பாளரையும் முதலில் பனியிடைநீக்கம் செய்யுங்கள், நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுங்கள், துறைசார் நடவடிக்கை எடுங்கள் என்று, தமிழக அரசுக்கும், மற்ற மாநில அரசுகளுக்கும் தீர்ப்பை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
நாம் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களிடமும், தீர்ப்பு நகலை கொடுத்திருக்கிறோம், புகார் கொடுக்கும் போது இதையும் இணைத்து கொடுங்கள். இப்படிபட்ட உதவி ஆய்வாளர் போன்ற தறுதலை அதிகாரிகளால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும்தான் பாதிக்கப்படுவார்கள். உங்களுடைய போக்கை மாற்றிகொள்ளுங்கள், நடவடிக்கை எடுக்காவிட்டாலும் இருப்பதை சொல்லிதொலைத்தால் மற்ற அதிகாரிகளாவது நடவடிக்கை எடுப்பார்கள். தீண்டாமை கொடுமைகளை தடுக்காமல் இருப்பதை விட இல்லை என்று சொல்வது மிகக்கேவலமான போக்கு என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என அதிகாரிகளைக் கேட்டுகொள்கிறேன்.

1926 ஆம் ஆண்டு, பின்னாளில் பொதுவுடைமை கட்சியை நடத்திய ஜீவா அவர்கள் நடத்திய சிராவயல் ஆசிரமத்தில் காந்தி வாசகசாலையை திறந்து வைப்பதற்காக பெரியார் அவர்களை அழைக்கிறார்கள். அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்காக காந்தி கிணறு என்று வெட்டப்பட்டிருக்கிறது. “நீங்கள் பொதுகிணற்றில் நீர் எடுக்கப் போராடுங்கள் அல்லது தாகத்தோடு செத்துப்போங்கள், ஆனால் தனிக்கிணற்றில் நீர் எடுக்காதீர்கள்” என்று தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து பெரியார் சொன்னார். இப்பொழுது நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில், உங்களுக்கு தனிகுழாய் அமைத்து தருகிறோம் என்று கோட்டாட்சியர் சொல்லியிருக்கிறார். பைத்தியக்காரா இது குடிநீர் சிக்கல் அல்ல தீண்டாமை சிக்கல் என்று தோழர்கள் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். தோழர்கள் சுட்டிக் காட்டியதைப் போல் அம்பேத்கர் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் போராடினார். குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய பின்னாலும் போராடினர். அதைதான் நாம் இப்போதும் செய்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரம் சட்டங்கள் வந்துவிட்டது, தீண்டாமை கொடுமைகளை செய்கிறவர்கள் மீது மட்டுமல்லாது, கடமையை சரிவர செய்யாத அரசு அதிகாரிகளின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி தண்டணை உண்டு என்பது பற்றியாவது அறிவீர்களா?. வழக்கு தொடுத்து முப்பது நாட்களுக்குள் புலன் விசாரனையை முடிக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இப்பொழுது பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன, இன்னும் பதினைந்து நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித்தாளைப் பார்த்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருகிற சமூகநீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கு அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்களை பார்த்தப் பின்னாலும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களை கைது செய்வதாக இருந்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணி, ஒருமணிக்கு கூட வருகிறீர்கள். ஆணால் இது எவ்வளவு பெரிய குற்றங்கள்.

இது மனித சமுதாயத்தின் சமத்துவத்திற்கு எதிரான குற்றங்கள். இவைகள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குதான் இருந்துகொண்டிருக்கிறது. இது தனித்தனி நிகழ்ச்சிகளாக போராட வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம் தத்துவ ரீதியாக, இப்படிபட்ட தீண்டாமை, அதை தாங்கி பிடித்துகொண்டிருக்கிற சாதிகள், அதை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிற இந்து மதம், வேதங்கள், சாஸ்திரங்கள், இவைகள் எல்லாம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரியாரும்,அம்பேத்கரும் இந்த சமுதாயத்திற்கு விட்டுச்சென்ற கருத்துக்கள். அதை நோக்கி ஒருபக்கம் தத்துவ தளத்தில் நகருகிறபோது, சமுதாயத்தில் நடக்கிற இப்படிபட்ட தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக நாம் அவ்வப்போது, உடனே எதிர்வினை ஆற்றியாக வேண்டும். நான் மீண்டும் மீண்டும் சொல்லிகொள்ள விரும்புகிறேன். மனித உரிமை பிரிவு செய்கிற தவறுகளால், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், பதவி இழக்கப் போகிறார்கள் என்பதுதான் எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. குட்டிநாய் குளைத்து பெரியநாய்க்கு ஆபத்து என்று சொல்வார்கள், அதுபோல இவர்கள் செய்கிற தவறுகளால் மேலதிகாரிகளுக்கு ஆபத்து என்பதை அவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்,.

அதிகாரிகள் என்பவர்கள், எங்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிற வேலைக்காரர்கள். பணக்காரர்களைப் போல் எங்களால் தனித்தனியாக கூர்க்கா - செக்யூரிட்டி வைத்துகொள்ள முடியாது என்பதால் அரசாங்கத்தின் மூலம் உங்களை ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்களுடைய வேலைக்காரர்களாகிய நீங்கள் வேலையை சரியாக செய்யவில்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எஜமானர்களாகிய எங்களுக்கு உண்டு. எந்த வன்கொடுமை நிகழ்ந்தாலும் 3(1)(10) பிரிவைத்தான் போடுவீர்கள? அந்தப் பிரிவு வழக்குதான் உச்சநீதிமன்றம் ஆறுமுகம் சேர்வைக்கு, தண்டனையை உறுதிச் செய்திருக்கிறது. ஏன் நீர் உரிமையை மறுத்ததாக 3(1)(5) பிரிவையும் சேர்த்துப் போடமாட்டீர்காளா? எங்களுக்கு எந்த தனிப்பட்ட அதிகாரிமீதோ, குறிப்பிட்ட நபர் மீதோ கோபம் இல்லை. இதை செய்கிற யாராக இருந்தாலும் கோபம் வராமல் இருக்கப் போவதும் இல்லை. பொதுக் குழாயில் நீர் எடுப்பதற்கு மட்டுமான போராட்டம் அல்ல. செல்போனில் பேச கூடாது, பைக்கில் போகக்கூடாது என்கிற கொடுமை பற்றி, “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிக்கையில் செய்தி வருகிறது. . எங்கோ இருக்கிற மனித உரிமை ஆணையத்திற்கு செய்தித் தாளைப் பார்த்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இங்கு இருக்கும் காவல் துறை புகார் ஏதும் வரவில்லை என்கிறார்கள்.

புகார் கொடுக்க வருபவர்களை அங்கும் இங்கும் அழைக்கழித்துக் கொண்டு தானே இருக்கிறீர்கள்? எப்படி புகார் கொடுப்பார்கள்? தீண்டாமை இருப்பது பற்றி தெரிந்த பின்னாலாவது, இது குறித்து பிரசாரம் செய்ய வேண்டும், காவல் துறையை, வருவாய்த்துறையை அழைத்துச்சென்று, தீண்டாமை நிலவும் பகுதிகளை காட்டவேண்டும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று எல்லாம் சட்டத்தில் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் கால் பகுதியாக இருக்கிற மக்களை, பீடித்திருக்கிற கொடுமைகளுக்கு நாம் தீர்வு காண்போம், தீர்வு கான்பதற்கான முயற்சியில் ஒறுதான் இந்த போராட்டம். அந்த சிறுவனை அடிக்கிற போது ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள், அதை எங்களுடைய பொதுச்செயலாளர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ளார். நக்கீரன் இதழ் பேட்டியில், பாதிப்புக்குள்ளான சிறுவன்வசந்தகுமார், கலாமணி என்ற பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டுருக்கிறார். மற்ற இரண்டு பெண்கள் யார் என்பதை விசாரித்தறிய வேண்டும். இவைகளை வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இப்படிப்பட்ட கொடுமைகள் தடுத்துநிறுத்தப் படவேண்டும். இனி இப்படிப்பட்ட கொடுமைகள் நிகழக் கூடாது என்பதை எதிர்பார்த்துதான் இந்த போராட்டம். இதை கேட்டுக்கொண்டிருக்கிற உளவுத்துறை உரிய அதிகாரிகளுக்கு சரியான செய்தியை சொல்லுங்கள், அதிகாரிகள் தீண்டாமைகளை நிகழாமல் தடுக்க வேண்டும் என்று கேட்டு, இந்த ஆர்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன் வணக்கம்.