Thursday, August 20, 2009

கலைஞர் அன்றும் இன்றும்

அன்று....

தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது. அந்த இயக்கத்துக்கு உதவிகள் செய்வதுதான் குற்றம் என்று ‘பொடா சட்டப் பிரிவுகளின் அடிப்படையிலேயே உச்சநீதிமன்றம் 16.12.2003 இல் தீர்ப்பளித்தது. தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ராஜேந்திர பாபு மற்றும் ஜி.பி. மாத்தூர் ஆகியோர் வழங்கியிருந்தனர். இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேதான் ஜெயலலிதா ஆட்சியில் பொடாவில் கைது செய்யப்பட்டிருந்த பழ. நெடுமாறன், வை.கோ. உள்ளிட்டோர், சுமார் ஒன்றரையாண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை சட்டமன்றத்தில் ஜெயலலிதா, தவறாக சுட்டிக் காட்டினார். தி.மு.க. ஆட்சியில் அவர் மீது உரிமை மீறல் பிரச்சினையும் கொண்டு வரப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா, தனது தவறான கருத்தை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி ‘முரசொலி’ ஏட்டில் (பிப்.19, 2008) விளக்கமாக விடுத்துள்ள அறிக்கையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பகுதிகளையே எடுத்துக் காட்டி பதில் எழுதினார்.
“உள்நோக்கத்துடன் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே பொடாச் சட்டம் 3(1) பிரிவின் கீழ் குற்றமாகக் கருதப்படும். கிரிமினல் நோக்கத்துடன் செய்யப்பட் டிருந்தால் மட்டுமே அது பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும் என்று நாடாளுமன்றம் வகுத்துள்ளபோது ஒரு நபர், ‘பகிரங்கமாக அறிவிப்பதாலோ’ (பொடாவின் 20வது பிரிவு) அல்லது, “ஆதரவைக் கோரினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தாலோ, நிர்வகித்தாலோ” அல்லது “ஏற்பாடு செய்வதினாலோ” அல்லது “ஒரு கூட்டத்தில் பேசினாலோ” (பொடாவின் 21வது பிரிவு), ஒரு (பயங்கரவாத) அமைப்பின், எந்தவிதமான நடவடிக்கைக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் நோக்கம் அல்லது திட்டம் அல்லது பயங்கர வாதச் செயலை செய்ய உதவும் திட்டம் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அந்த நபர் குற்றம் இழைத்துள்ளார் என்று எப்படிக் கூற முடியும்? அப்படி இல்லை என்று நாங்கள் தெளிவாக இருக்கிறோம்” (‘முரசொலி’ பிப்.19, 2008)
- கலைஞர் கருணாநிதி உச்சநீதிமன்றத் தீர்ப்பை எடுத்துக் காட்டி அன்று ‘முரசொலியில் இப்படி எழுதினார்.
இன்று....
“தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள், கொடி மற்றும் இலட்சினைகளை பொது விளம்பரங்களுக்கு உபயோகித்தல் மற்றும் பத்திரிகை, தொலைக் காட்சிகளில் பிரசுரித்தல் / காண்பித்தல் ஆகியவை unlawful activities (prevention) act , 1968படி தண்டனைக்குரிய குற்றங்களாகும். எனவே, பொதுக் கூட்டங்கள், மாநாடு, பேரணி போன்றவற்றை நடத்துபவர்கள் யாராயினும், எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாயினும் இதை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரிக்கப்படுகிறது. - தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசு.”
- இது இன்று தி.மு.க. அரசு ஏடுகளில் தந்துள்ள விளம்பரம்.
கொடூரமான ‘பொடா’ சட்டத்தின் கீழேயே தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதோ, கூட்டம் நடத்துவதோ, குற்றமாகாது என்று வாதிட்ட அதே கலைஞர் தான் - இன்று 1968 ஆம் ஆண்டு சட்டத்தைக் காட்டி கருத்துரிமையைப் பறித்து, காங்கிரசை மகிழ்விக்க துடிக்கிறார்.
காங்கிரஸ் இனப் படுகொலைக்கு துணை போனாலும், படுகொலைகளை முடித்த பிறகு, தமிழர்களுக்காக கண்ணீர் விட்டு அழுவதுகூட குற்றம் என்று காங்கிரஸ் கூறினாலும், கலைஞர், காங்கிரசின் பக்கம் தான் நிற்பார். தமிழின உணர்வை நசுக்குவார்!

இவர்கள் தான் புடம் போட்ட தமிழினப் பாதுகாவலர்களாம்!
அந்தோ, தமிழா, உனது நிலையைப் பார்த்தாயா?

No comments: