Tuesday, March 1, 2011

ஊடகங்கள் ஊதி விடும் கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கிவிட்டது. பார்ப்பனர்களும் ஊடகங் களும் கிரிக்கெட்விளையாட்டினை விளையாட்டு என்ற எல்லையைத் தாண்டி சந்தைப் பொருளாதாரமாக்கி அரசியலாக்கி விட்டனர். ஏனைய விளையாட்டுகளின் சிறப்புகள் இருட்டடிக்கப்பட்டுவிட்டன. பார்ப்பனர்கள் கிரிக்கெட்டை உயர்த்திப் பிடிப்பது ஏன்? 2003 ஆம் ஆண்டு உலக கிரிக்கெட் போட்டியின்போது புரட்சிப் பெரியார் முழக்கம்வெளியிட்ட கட்டுரை இது. இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தி வருவதால் மீண்டும் வெளியிடுகிறோம்.

பிரிட்டிஷ் பிரபுக்கள் குளிர் காய்வதற்கான நாள் முழுதும் சூரிய ஒளியில் நிற்பதற்குக் கண்டுபிடித்த விளையாட்டுதான் கிரிக்கெட். எனவேதான் அய்ந்து நாள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து பார்சிகளும், இதில் ஆர்வம் காட்டத் தொடங்கினர். பிரிட்டிஷாருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இப்படி ஒரு நல்ல வாய்ப்பு இருப்பதைத் தாமதமாக உணர்ந்த பார்ப்பனர்கள், அதை பிடித்துக் கொண்டு விட்டனர். ஆஹிஷ் நந்தி என்பவர், கிரிக்கெட்டையும், இந்து மதத்தையும் ஒப்பிட்டு, இது இந்திய விளையாட்டு என்று எழுதியிருக்கிறார்.

பார்ப்பனர்களை கிரிக்கெட் இழுத்ததற்கு மற்றொரு காரணம் - ஹாக்கி, கால்பந்து, வாலிபால், சடுகுடு போல அரைக்கால் சட்டைப் போட்டுக் கொண்டு விளையாட வேண்டிய அவசியமில்லை. முழுக்கால் சட்டைப் போட்டுக் கொண்டே கிரிக்கெட் விளையாடலாம்.

இதை எல்லாம் விட மிக முக்கியக் காரணம் - மற்ற விளையாட்டுகளைப் போல், ஒருவரை ஒருவர் தொட்டுக் கொண்டு விளையாட வேண்டிய அவசியம் இதில் இல்லை. இடித்துத் தள்ளவோ ஒருவர் மீது ஒருவர் உராசிக் கொள்ளவோ தேவை இல்லை. எனவே, தீண்டாமைக் கொள்கையைக் கைவிடாமல் விளையாட லாம். பந்தின் லாவகத்தைக் கணக்கிட்டு மட்டையை சுழற்ற வேண்டிய மூளைக்கான வேலைதான் தேவை. இது பார்ப்பனர்களுக்கு மிகவும் எளிது. அதோடு மற்ற விளையாட்டுகளைப்போல் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் தன்னை மய்யப்படுத்திக் கொள்ள முடியும்.

கவாஸ்கர் போன்றவர்கள் இப்படித்தான் தங்களை சாதனையாளர்களாகக் காட்டிக் கொண்டனர். இவர்களின் தனிப்பட்ட சாதனையாக்கிக் கொண்டார் களே தவிர, அணியின் சாதனையாக மாற்றவில்லை. வேகப் பந்து வீச்சாளராக பார்ப்பனர்கள் தங்களது திறமையைக் காட்டவில்லை. காரணம் - அதற்கு அதிகமாக வியர்வை சிந்த வேண்டும். இதனால் தான் பார்ப்பனர்கள் பலர் பேட்ஸ்மேன்களாக பரிணமித்த அளவுக்கு, பவுலர்களாக அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களாக திறமையைக் காட்டவில்லை.

1950 முதல் 1990=கள் வரை நடந்த போட்டிகளில் (டெஸ்ட் மேட்ச்) சராசரியாக 6 பார்ப்பனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். சில நேரங்களில் இந்த எண்ணிக்கை 9 ஆகவும் இருந்திருக்கிறது. 11 பேர் கொண்ட அணியில் பார்ப்பனரல்லாதவர்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே தரப்பட்டதும் உண்டு.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் என்பது 1970களின் இறுதி வரை ஸ்பின் பவுலர்களின் ஆதிக்கமாகவே இருந்தது. இந்தப் பார்ப்பனக் கோட்டையைத் தகர்த்தவர் - கபில்தேவ் என்ற பார்ப்பனரல்லாதவர்தான். அவர்தான் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி - உலகத் தரத்தில், ஒரு விளையாட்டாளரானார். கபிலின் வருகையும், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் தான் இந்திய கிரிக்கெட்டின் பார்ப்பன முகத்தை மாற்றியாக வேண்டிய நெருக்கடியை உருவாக்கின.

பிறகு ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், அகர்கர் போன்ற பார்ப்பனர்கள் கூட வேகப்பந்து வீச்சில் திறமை காட்டத் தொடங்கியதற்குக் காரணம், கபில்தேவ் வருகைதான்.

அய்ந்து நாள் டெஸ்ட் போட்டிகள் அதிகமாக விளையாடப்பட்டு வந்த காலத்தில் கவாஸ்கர் போன்ற பார்ப்பனர்கள் ஒரு சதம் அடிப்பதற்கு 2, 3 நாட்களைக் கூட எடுத்துக் கொள்வார்கள். எத்தனை ஓட்டங்கள் என்பதைவிட எவ்வளவு நேரம் களத்தில் நிலைத்து நின்றார் என்பதுதான் பெருமையாகக் கருதப்பட்டது. இப்படி நிலைத்து நிற்பவர்கள், ஆபத்தான கட்டத்தில் டிராஎன்ற கவசத்தைப் பயன்படுத்தி தோல்வியி லிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். கவாஸ்கர், கெய்க்வாட், யஷ்பால், சர்மா போன்ற பார்ப்பனர்கள் இந்த தந்திரத்தைத்தான் பல நேரங்களில் கடை பிடித்துள்ளனர்.

இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, ஒரு வங்காளப் பார்ப்பனர். சுறுசுறுப்பு இல்லாதவர் என்றும், பலமுறை கோட்டை விட்டவர் என்றும் ரசிகர்களால் விமர்சிக்கப் படுபவர். கிரிக்கெட் வல்லுனர்கள், அவரது விளையாட்டைக் கடுமையாகக் குறை கூறுகிறார்கள். ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் தரப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளராக ஸ்ரீநாத் எனும் பார்ப்பனர் - ஒரு சைவ உணவாளர். ஆச்சாரப்படி அசைவம் சாப்பிட மாட்டார். ஆனாலும் பந்து வீச்சுத் திறனை அதிகரிக்க மாமிசம் சாப்பிட வேண்டும் என்று பயிற்சியாளர் அறிவுறத்திய பிறகு அசைவமாகி விட்டார்.

5 நாள் போட்டிக்கு தான் பார்ப்பனர்கள் சரிப்படு வார்கள். ஒரு நாள் போட்டிக்கான சுறுசுறுப்பான உடல்வாகு அவர்களுக்கு இல்லை. இப்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், ஸ்ரீநாத், கும்ப்ளே, அகர்கர் ஆகிய ஆறு பார்ப்பனர்கள் இடம் பிடித் துள்ளனர்.

இந்திய அணியில் தலித்துகளுக்கு எப்போதுமே இடம் கிடையாது. வினேன் காம்ப்ளி என்ற மீனவர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் மட்டும் இருக்கிறார். இது தவிர, பல்வங்க் பலூ என்ற தலித் வீரரை மட்டும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுத்தனர். அவரையும்கூட, களத்தில் இறக்கிவிடாமல், அரங்கத்தில் உட்கார வைத்தே திருப்பி அனுப்பி விட்டார்கள்.

கேரளாவிலிருந்து வந்த டினு யோகானன், தடகள வீரருக்கு உரிய உடல்கட்டு கொண்டவர்.

இவரது தந்தை ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றவர். நல்ல விளையாட்டுக் குடும்பத்தில் வந்த இவரை, மும்பை பார்ப்பனர் அகர்கருக்காக, பலிகடாவாக்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் அணி என்று கேரள கிரிக்கெட் ரசிகர்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

இந்திய அணியில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய இடம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் அய்யர் - அய்யங்கார் பிரச்னை பெரிதாக இருக்கிறதாம். எஸ்.வி.டி. சாரி, வெங்கட்ராகவன், ஸ்ரீகாந்த், ராமன், சடகோபன் ரமேஷ் என்று அய்யங்கார்கள் தான் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். சிவராமகிருஷ்ணன், வி.வி.குமார் என்ற இருவர் மட்டும்தான் அய்யர்கள் என்கிறது சேப்பாக்க கிரிக்கெட் வட்டாரம்.

(2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த கட்டுரை யில் கூறப்பட்ட கருத்துகளில் இப்போது பெரிய மாற்றம் எதுவும் இல்லை. அதே நிலைதான் நீடிக்கிறது.)

குழந்தைகள் உரிமை: ம.பி. மாநிலத்தில் நடக்கும் பார்ப்பன கூத்து

ம.பி. மாநில அரசு குழந்தைகள் உரிமைகளுக்கான குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராக இருப்பவர். தலைமை பெண் நீதிபதி ஷீலா கண்ணா, ம.பி. மாநிலத்தில் 60 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்து குறைந்தவர்கள். இவர்களுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய நிலையில் குழந்தைகள் உரிமைகளுக்கான குழுத் தலைவர் அதற்காக கூறியுள்ள பரிந்துரை கடும் எதிர்ப்புக்குள்ளாகியுள்ளது.

ஒவ்வொரு குழந்தைகள் நலன் மய்யத்திலும் ஒரு பார்ப்பன சோதிடரையோ அல்லது அர்ச்சகரையோ நியமிக்க வேண்டும். குழந்தைகளின் சோதிடத்தைப் பார்த்து அந்தக் குழந்தை எதிர்காலத்தில் சிறந்தவர்களாக வரக் கூடிய வாய்ப்புண்டா என்று சோதிடத்தின் அடிப்படையில் அந்தப் பார்ப்பனர் மதிப்பிட nண்டும். அப்படி சிறந்தவர்களாக வருவார்கள் என்று பார்ப்பனர் பரிந்துரைக்கும் குழந்தைக்கு மட்டும் அரசு உரிய சிகிச்சை வழங்கி உதவிட வேண்டும். மற்ற குழந்தைகள் பற்றி கவலைப்படத் தேவையில்லைஎன்று கூறியிருக்கிறார். இதற்கு சமுக சேவை அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குழந்தைகள் உரிமைகளுக்கான தேசிய ஆணையத் தலைவர் சாந்தா சின்கா, குழந்தைகள் உரிமைக்கான மய்யத்தின் தலைவர் பார்த்தி அலி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்புக்குப் பிறகு நீதிபதி, தாம் அப்படி ஏதும் எழுத்து வடிவில் தெரிவிக்கவில்லை என்று மறுத்துள்ளார். குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக நடந்த விவாதத்தின் போது நீதிபதி ஷீலா கண்ணா, இக்கருத்தை முன் வைத்துள்ளார் என்று குழந்தைகளுக்கான தேசிய மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. நாட்டின் தலைமை நீதிபதிகளாக இத்தகைய சாதிவெறி மூடநம்பிக்கையுள்ள பார்ப்பனர்கள் இருப்பது வெட்கக் கேடு அல்லவா? இத்தகைய நீதிபதிகளிடமிருந்து கிடைக்கும் தீர்ப்புகள் எத்தகையதாக இருக்கும்?

No comments: