Friday, March 6, 2009

சகோதர யுத்தத்தைத் தொடங்கி வைத்த ‘ரா’ ( RAW )

‘ரா’ உளவு நிறுவனம், அவ்வப்போது, பல ஈழத் தமிழர் குழுக்களை உருவாக்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அந்தக் குழுக்களைப் பயன்படுத்தி வருவது கல்லில் செதுக்கப்பட்ட உண்மையாகும். ஆனால், விடுதலைப்புலிகளை முழுமையாக அழிக்கும் இலக்கில் தோல்வி அடைந்து, இந்திய ராணுவம் இந்தியா திரும்பிவிட்டது. அதன் பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை - இந்திய ராணுவத்துக்கு பதிலாக, இந்திய உளவுத் துறையே ரகசியமாக நடத்தி வருகிறது என்பதே பல ஆய்வாளர்களின் கருத்தாகும்.ஆனாலும், விடுதலைப்புலிகள் - மக்கள் பேராதரவோடு சிறிலங்கா ராணுவ ஒடுக்குமுறைகளை எதிர்த்து - உலகமே வியக்கும், விடுதலைப் படையாக போராட்டக்களத்தில் நிற்கிறது. 1983 ஆம் ஆண்டிலிருந்து, வலிமை மிக்க இந்திய ராணுவமும், ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவ உதவிகளைப் பெற்ற சிறிலங்கா ராணுவமும், தமிழ் மக்கள் மீது நடத்திய ராணுவத் தாக்குதல்கள், குண்டுவீச்சுகள், அழித்தொழிப்புகளை எதிர்கொண்டு, தமது தாயகத்துக்கான விடுதலை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. ஈழப் பிரச்சினையில் இனி இந்தியா நேரடியாகத் தலையிடாது என்று அறிவிப்புகள் வந்தாலும், பார்ப்பன-பனியா அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கத்தில் இயங்கும் உளவு நிறுவனம் - தனது முழு ஆற்றலையும் பன்படுத்தி, ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சிகளில் முனைப்பாக பங்காற்றி வருகிறது.
விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டுமெனில் அவர்களின் மக்கள் ஆதரவுத் தளத்தை அழித்தொழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, பல போராளிக் குழுக்களை ‘ரா’ உளவு நிறுவனமே உருவாக்கியது.‘டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்புகள் ஈழத்தின் விடுதலைக்காக - ஆயுதம் ஏந்திப் போராடும் அமைப்புகளாக தங்களை அறிவித்துக் கொண்டவை. ‘டெலோ’ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினம். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்ட சிறி சபாரத்தினத்துக்கும் ‘ரா’ உளவு நிறுவனத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளிவந்த நூலிலிருந்தே இதற்கு சான்று காட்டலாம். எம்.ஆர். நாராயணசாமி, ஆங்கிலத்தில் எழுதி, உளவு நிறுவனங்களால் பெரிதும் போற்றப்படும் நூல் ‘
‘Tigers of Lanka’
நூலில் இவ்வாறு நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:
“1983-ல் ‘ரா’ தமிழ்ப் போராளி குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி தந்தது. அப்போதே பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையையும், முரண்பாடுகளையும் ‘ரா’ உருவாக்கியது. செயலிழந்த குழுக்களுக்கு ‘ரா’ உயிரூட்டும் முயற்சிகளில் இறங்கியது. இதனால் எல்.டி.டி.ஈ. கவலைக் கொண்டது. ‘டெலோ’வை ‘ரா’ ஊக்குவித்தது. ‘ரா’வுக்கு மிகவும் நெருக்கமான குழு ‘டெலோ’ தான் என்றும், அந்தக் குழுவைத்தான் ‘ரா’ உண்மையாக ஆதரிக்கிறது என்றும், ‘ரா’ கருத்துகளைப் பரப்பி, ‘டெலோ’வை உற்சாகப்படுத்தியது. இதனால், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையையும் - சிறீசபாரத்தினம் ‘ரா’வோடு கலந்து ஆலோசித்தார். ஒவ்வொரு தாக்குதலுக் கும், எத்தனை போராளிகள் தேவை என்பதைக்கூட ‘ரா’வின் ஆலோசனை களைப் பெற்றே செயல்பட்டார். (நூல்: பக். 326)”
இப்படி, ‘டெலோ’வின் மூளையாகவே செயல்பட்டது ‘ரா’ உளவு நிறுவனம் தான். ஈ.பி.ஆர்.எல்.எப். - இந்திய ராணுவத்தின் செல்லப் பிள்ளை. மக்கள் ஆதரவற்ற அந்த அமைப்பு இந்திய ராணுவத்தின் வலிமையில் தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையில், இந்திய ராணுவம் இந்தியா திரும்பியவுடனேயே அந்த அமைப்பினரும், அந்த அமைப்பின் சார்பில் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் முதல்வராக அமர வைக்கப்பட்ட வரதராஜப் பெருமாளும் இந்திய ராணுவத்துடனேயே இந்தியாவுக்கு கரை சேர்ந்து விட்டனர். அவர்களை பத்திரமாக கரை சேர்த்தது இந்திய உளவுத் துறை தான்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக - அப்போது உளவு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பு ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ என்று அழைக்கப்படும் ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்பாகும். இந்த அமைப்பை உருவாக்கியது யார்? எப்படி உருவாக்கப்பட்டது? ‘இந்து’, ‘பிரன்ட் லைன்’, ‘சண்டே லீடர்’ போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வரும். செய்தியாளர் டி.பி.எ°. ஜெயராஜ் கட்டுரையிலிருந்து இதற்கு விடை தர முடியும். அவர் எழுதுகிறார்: “ஈ.என்.டி.எல்.எப். - உருவான கதை மிகவும் சுவையானது. (இதன் தலைவராக உள்ள) பரந்தன் ராஜன் என்பவர் ஆரம்பத்தில் ‘புளோட்’ அமைப்பில் இருந்தார். லெபனான் நாட்டுக்குப் போய் பயிற்சி பெற்றவர். இவர் புளோட்டில் - ராணுவத் தளபதி பதவியை எதிர்பார்த்தார். ஆனால், ‘புளோட்’ தலைவர் உமாமகேசுவரன் அப்பதவியை வேறு ஒருவருக்கு தந்ததால் - பரந்தன் ராஜன் வெறுப் படைந்து, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
இப்படி வெளியேறிய குழுவினரும், ஏற்கனவே ‘டெலோ’, ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ அமைப்புகளிலிருந்து அதிருப்தியுற்று வெளியேறிய குழுவினரும் இணைந்து - ‘மூன்று நட்சத்திரங்கள்’ (Three Stars) என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கினார். மூன்று அமைப்புகளின் அதிருப்தியாளர்கள் உருவாக்கிய குழு என்பதால் - மூன்று நட்சத்திரம் என்று பெயர் சூட்டப் பெற்றது. பிறகு ‘புளோட்’ அமைப்பிலிருந்து ஈசுவரன் என்பவர் தலைமையில் மற்றொரு அதிருப்தி குழு விலகியது. அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிலிருந்து பத்மநாபா தலைமையில் ஒரு குழுவும், டக்ள° தேவானந்தா தலைமையில் ஒரு குழுவும் ஆக, 2 குழுக்கள் விலகின. அப்போது ‘ரா’ 1987-ல் மூன்று நட்சத்திர அமைப்பையும், டக்ள°, ஈசுவரன் தலைமையிலான குழுக்களையும் ஒன்றாக்கி ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பை உருவாக்கியது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்குப் பிறகு பரந்தன் ராஜனிடமிருந்து டக்ள° தேவானந்தா விலகி ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) என்ற அமைப்பை தனியே ஏற்படுத்திக் கொண்டார். இதனால் - ‘ஈ.என்.டி.எல்.எப்.’ பரந்தன்ராஜனின் முழுக் கட்டுப் பாட்டுக்குள் வந்தது” - இதுதான் ஈ.என்.டி.எல்.எப். தோன்றிய கதை. இந்த அமைப்பை உருவாக்கியது இந்தியாவின் ‘ரா’ உளவு நிறுவனம்.”டெல்லியிலிருந்து வெளிவரும் ‘டெகல்கா’ ஆங்கில வார ஏட்டில் (ஜுலை 1, 2006) பி.சி. வினோஜ்குமார் எழுதிய கட்டுரையிலும் -“பரந்தன்ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பு விடுதலைப் புலிகள் செல்வாக்கைக் குறைப்பதற்காக ‘ரா’ உளவு நிறுவனத்தால் உருவாக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது”
- என்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான குழுக்களை ஒருங்கிணைக்கும் மய்யப் புள்ளியாக இந்த அமைப்பு திகழுகிறது என்றும் குறிப்பிடுகிறார். இதில், இந்திய உளவுத் துறையின் ஆதரவோடு செயல்பட்ட டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி குறிப்பிட வேண்டும். யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா - இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் -
1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர். சென்னை சூளைமேட்டில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும், இந்திய உளவு நிறுவனத்தின் முழு ஆதரவோடு இவர் செயல்பட்டு வருகிறார்.இதே டக்ள°தான் சென்னையில் 10 வயது பையனைக் கடத்திப் போய், ரூ.7 லட்சம் பணம் கேட்டார் என்று ஒரு வழக்கு கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவர் 1989-ல் சென்னையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஓராண்டு கழித்து விடுதலை செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய வைத்து, அதன் பிறகு இந்திய ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை களில் ஈடுபட வைத்தது - இந்திய உளவு நிறுவனமாகிய ‘ரா’ தான் என்று ‘டெகல்கா’ வார ஏடு (ஜூலை 1, 2006) எழுதியுள்ளது.
(Sources say, it was ‘R&AW’ which Air lifted Devananda to Jaffna on an Indian Army helicopter to pit him against the LTTE) ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை என்றாலும், இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல், தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க முன் வந்தனர். ஆனாலும், விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தக் காலத்திலும் இந்தியாவுக்கு அடிபணியாது என்று ‘ரா’ உளவு நிறுவனம், உறுதியான முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்ட விடுதலைப்புலிகளை, பலவீனமாக்கி செயலிழக்கச் செய்யும் திட்டங்களை உருவாக்கியது. இந்திய ராணுவத் தின் தளபதியாக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் பிரபாகரனை சந்தித்தபோது, பிரபாகரனே அவரிடம் நேரில் நடத்திய உரையாடலை இந்திய ராணுவத் தளபதியாக இலங்கையில் செயல்பட்ட தீபிந்தர் சிங் தனது நூலில் பதிவு செய்துள்ளார்:
“1987 ஆம் ஆண்டு ஆக°டு 15 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தில் பிரபாகரனை நான் சந்தித்தபோது, தங்களுக்கு நம்பகமான ஒரு தகவல் கிடைத்துள்ளது என்றார். நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், மிகவும் பலவீனமாகி விட்டோம் என்று ‘ரா’ உளவு நிறுவனம் கூறி வருவதோடு, எங்களோடு ராணுவ மோதலை நடத்துமாறு, ஏனைய தமிழ் குழுக்களைத் தூண்டிவிட்டு வருகிறது. குறிப்பாக அண்மையில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று நட்சத்திரக் குழுக்களை எங்களுக்கு எதிராகப் பயன்படுத்த ‘ரா’ திட்டமிட்டுள்ளது என்று பிரபாகரன் என்னிடம் கூறினார். இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு என்பதால், அன்று மாலையே இந்திய ராணுவத் தலைமையகத்துக்கு தெரிவித்து, இது பற்றி விசாரிக்குமாறு கூறினேன். அது உண்மையல்ல என்று அடுத்த நாள் எனக்கு பதில் வந்தது. அதை பிரபாகரனை சந்தித்துத் தெரிவித்தேன். எனது மறுப்பைக் கேட்ட பிரபாகரன் மிகவும் அமைதியாக பதில் சொன்னார். நீங்கள் உண்மையானவராக இருக்கிறீர்கள். ஆனால், டெல்லியிலிருந்து உங்கள் மூலமாக தரப்பட்ட தகவல் உண்மையல்ல; நான் கூறியதுதான் உண்மை என்று தனது குற்றச்சாட்டில் உறுதியாக இருந்தார்.”- லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்சிங் எழுதிய "The I.P.K.F. in Srilanka"
நூல் - பக்.56பிரபாகரன் கூறியதுதான் நடந்தது. போட்டிக் குழுக்களை உருவாக்கி சகோதர யுத்தத்தை தொடங்கி வைத்ததே ‘ரா’ நிறுவனம் தான். அதற்காகவே டக்ள° தேவானந்தாவை சென்னை சிறையிலிருந்து விடுவித்து, இந்திய ராணுவ விமானத்தில் யாழ்ப் பாணத்துக்கு அனுப்பி வைத்தது ‘ரா’.தனது கட்டுப்பாட்டுக்குள் வர மறுத்து - தமது இலக்கில் உறுதியாகத் திகழ்ந்த விடுதலைப்புலிகளைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு எதிராக போட்டிக் குழுக்களை உருவாக்கியும், அதில் வெற்றி பெற முடியாமல் கரியைப் பூசிக் கொண்டு, 1990-ல் இந்திய ராணுவம், இந்தியா திரும்பிய போது, ‘ரா’ உருவாக்கிய ஈ.என்.டி.எல்.எப்., ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய குழுக்களையும் இந்தியாவுக்கு தங்களுடனே அழைத்து வந்துவிட்டது உளவுத் துறை. அப்போது இந்தப் போட்டிக் குழுக்களுக்கு முழு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தது, இந்திய உளவு நிறுவனம் தான். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தைக் குலைக்க ‘ரா’ எவ்வளவு முறைகேடுகளை செய்தது என்பதற்கு இவைகள் சாட்சியங்கள்!
இதற்கான ஆதாரங்கள் - ராஜீவ் கொலையில் அன்னிய சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் ஆணையத்தின் அறிக்கையில் அரசு ஆவணங்களோடு பதிவாகியுள்ளன. போட்டிக் குழுக்களையும் தமிழகத்துக்கு அழைத்து வருவதை தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சி எதிர்த்தது. இப்படிப் போட்டிக் குழுக்கள் தமிழகத்துக்கு வந்தால், தமிழ்நாட்டில் சகோதர யுத்தங்கள் நடக்கும் ஆபத்துகள் இருப்பதை முதல்வர் கலைஞர் கருணாநிதி சுட்டிக் காட்டினார். அன்றைய பிரதமர் வி.பி.சிங்குக்கும் இதை கடிதம் மூலம் எழுதினார். ஆனால், இந்திய உளவுத் துறை இதை செவிமடுக்காமல் போட்டிக் குழுக்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டியது.மத்திய அரசிடமுள்ள உளவுத் துறை தொடர்பான ஆவணங் களில் இது குறித்து, ஏராளமான செய்திகள் பதிவாகியுள்ளன. அவற்றை சுருக்கமாகப் பார்க்கலாம்:1990 மார்ச் மாதத்திலிருந்து (இந்திய ராணுவம் ஈழத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து) தமிழ்நாட்டுக்கு வரும் ஈழத் தமிழ் அகதிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
வழக்கமாக ராமேசுவரம் வழியாகவே வந்து சேருவார்கள். ஆனால், கன்னியாகுமரி வழியாக அதிகம் வரத் துவங்கினர்; சில நியாயமான காரணங்களுக்காக தி.மு.க. அரசு, போட்டிக் குழுக்களின் வருகையை எதிர்த்ததே இதற்குக் காரணம். அப்படி கன்னியாகுமரியில் வந்து இறங்கியவர்களுக்கு உரிய பாதுகாப்பு தந்து, அவர்களை தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களுக்குக் கொண்டு போவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஏராளமான ‘ஏஜெண்டுகள்’ இருந்தனர். பெரும்பாலோர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்குக் கொண்டு போகப் பட்டனர். (உளவு நிறுவனம் உருவாக்கிய - தமிழ்க் குழுக்களுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், உடனே கேரளாவுக்கு அவர்களை அனுப்பி வைத்தது உளவு நிறுவனங்களின் ஏற்பாடுதான். அதற்காக ஏஜெண்டுகளும் நியமிக்கப்பட்டார்கள்.)ராணுவத்தின் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழர்கள் அகதிகளாக 1983 ஆம் ஆண்டு முதல் வந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அவர்கள் அகதிகளாக பதிவு செய்யப்பட்டு, முகாம்களில் வைக்கப்படுகிறார்கள். இது வழமையான நடைமுறை. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு எதிராக குழுக்களை உருவாக்கிய இந்திய உளவு நிறுவனமே தனியாக கப்பல்களையும், விமானங்களையும் ஏற்பாடு செய்து, அந்தப் போட்டிக் குழுக்களை அழைத்து வந்தது. கப்பல்களில் வரும்போது, அவர்கள் துறைமுகம் வழியாக இறங்க வேண்டும். துறைமுக விதிகளின்படி கடவுச் சீட்டு, தமிழகத்தில் நுழைவதற்கான முறையான அனுமதி போன்றவை அவசியமாகும். ஆனால், உளவு நிறுவனங்கள் இந்த விதிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. சென்னைத் துறைமுகத்தில் தான் உருவாக்கிய போட்டிக் குழுவினை இறக்க முயன்றபோது, துறைமுக அதிகாரிகள் உரிய ஆவணங்களைக் கோரினர்; அவை இல்லாததால், துறைமுகத்தில் இறங்க அதிகாரிகள் அனுமதிக்க வில்லை.இந்திய உளவுத் துறையின் ஆதரவுக் குழுக்கள் திருகோண மலையிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு இரண்டு கப்பல்களில் வருகிறார்கள் என்ற தகவல், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. இதனால் மாநில அரசின் ‘சி.அய்.டி.’ பிரிவு துறைமுகத்தில் கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டிருந்தது.
ஆக, இவர்களை கப்பல்களில் அழைத்து வந்தது உளவு நிறுவனம் தான் என்பது, இதன் மூலம் உறுதியாகியது. அதனால் தான் காவல்துறை அதிகாரிகளோடு முன் கூட்டியே பேச முடிந்திருக்கிறது.இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்திய கப்பல் வாரியத்துக்கு சொந்தமான ‘ஹர்ஷவர்த்தனா’, ‘திப்பு சுல்தான்’ என்ற இரண்டு கப்பல்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘ரா’ உளவு நிறுவனத்தின் அமைப்பான ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ குழுவினரும், அவர்களது குடும்பத்தினருமாக 747 பேருடன் 8.3.1990-ல் ‘ஹர்ஷவர்த்தனா’ கப்பல் சென்னை துறைமுகம் வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமையால் தமிழ்நாட்டில் இறங்க அவர்கள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கப்பல் எரிபொருளை நிரப்பிக் கொண்டு, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குப் புறப்பட்டது.
அதே போல் ‘ரா’ உருவாக்கிய மற்றொரு குழுவான ‘ஈ.என்.டி.எல்.எப்’ குழுவினரை ஏற்றிக் கொண்டு வந்த ‘திப்பு சுல்தான்’ கப்பல் 10.3.90-ல் விசாகப்பட்டினம் வந்து சேர்ந்தது. இரண்டு கப்பல்களிலும் வந்த இரண்டு குழுக்களைச் சார்ந்த 1324 பேரும் தனிப் பேருந்துகளில் ஏற்றப்பட்டு ஒரிசாவின் மால்கங்கிரி, சத்திகுடா என்ற இரு வெவ்வேறு பகுதிகளில் தங்க வைக்கப் பட்டனர். (இத்தகவல்கள் ஜெயின் ஆணையத்தின் முன் அன்றைய சென்னை மாநகர காவல்துறை இயக்குநர் சிறீபால் தாக்கல் செய்த அறிக்கையிலும் அரசு ஆவணங்களிலும் இடம் பெற்றுள்ளன. (நூலின் பின் இணைப்பில் அந்த ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.)ஏற்கெனவே சென்னையிலிருந்த, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப். குழுவினர் ஒரிசாவுக்குப் போய் அங்கே இருந்த தங்களது குழுவினரை, தமிழ்நாட்டுக்குக் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தி உளவுத் துறை மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர், ஒரிசா மாநில அரசின் தலைமைச் செயலாளருக்கு 11.3.1990ல் தொலைவரி மூலம்
(Telex) ஒரு அவசர செய்தியை விடுத்தார். “தமிழ்நாட்டில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை தலை தூக்காமல் இருக்க, ஒரிசாவில் உள்ள ஈழத் தமிழ்க் குழுக்களை தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விரும்புகிறார்” என்று அந்த செய்தி எச்சரிக்கை செய்தது.கப்பலில் கொண்டுவரப்பட்டவர்களைத் தவிர, 11.3.1990-ல் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா உட்பட அக்குழுவைச் சார்ந்த 295 பேரை இந்திய உளவு துறை விமானத்திலும் ஒரிசாவுக்கு அனுப்பியது.
ஆனால், தமிழக அரசின் கண்காணிப்புகளையும் மீறி உளவுத்துறை உருவாக்கிய குழுக்கள் ஒரிசாவில் தங்கள் முகாம்களை மூடிவிட்டு, தமிழகத்துக்குள் நுழைந்து விட்டனர். இதை ‘கியு’ பிரிவு போலீசின் ரகசிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி - பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு ஒரு கடிதம் (26.4.1990) எழுதினார். அதில், ஒரிசாவில் மால்கங்கிரி முகாமில் இருந்த இலங்கை அகதிகள், அங்கிருந்து, தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என்றும், அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை தலைதூக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டுள்ள மற்றொரு கருத்து மிகவும் கவனிக்கத் தக்கதாகும். “ஒரிசா முகாமிலிருந்து, தமிழ்நாட்டுக்குள் நுழைந்த அகதிகள் மீது குடியேற்றச் சட்டத்தின் கீழோ, அல்லது ‘பாஸ்போர்ட்’ சட்டத்தின் கீழோ தான் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இந்தப் பிரச்னையில் அப்படி வழக்குகள் தொடர முடியாது என்று எங்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது. காரணம், இவர்கள், இந்தியா வுக்கு சொந்தமான கப்பல்களில், இந்தியத் துறைமுகமான விசாகப்பட்டினம் வழியாக வந்தவர்கள் என்பதால், அவர்களை அகதிகளாகவே கருத வேண்டும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது”
"But we have been advised that such prosecution cannot be sustained in this particular case, as they were brought by Indian Ships to an Indianport."
- என்று முதல்வர் கலைஞர் கருணாநிதி அக்கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தார்.
உளவு நிறுவனத்தின் அத்துமீறல்கள் எல்லை மீறி நடந்துள்ளதை, இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
• தங்களின் தாயக விடுதலைக்குப் போராடும் விடுதலைப் புலிகளை - ராணுவ ரீதியாக ஒடுக்க முயன்று, தோல்வி கண்டார்கள்.
• விடுதலைப் புலிகளுக்கு எதிராக - விரக்தியடைந்த குழுக்களைத் திரட்டி - ஆயுதம் வழங்கி, சகோதர யுத்தத்தைத் தூண்டி விட்டார்கள்.
• ஈழத்தில் துப்பாக்கி முனையில் - தங்களது எடுபிடி ஆட்சியை நிறுவினார்கள்.
• இந்திய ராணுவம் - அரசியல் நெருக்கடிகளால் திரும்ப வேண்டிய சூழ்நிலையில் - தாங்கள் உருவாக்கிய குழுக்களையும் இந்தியாவுக்கு அழைத்து வந்தனர்.
• அதற்கு இந்திய அரசு கப்பல்களையும், விமானங்களையும் பயன்படுத்தினர்.
• அன்றைக்கு தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த எதிர்ப்பைப் புறக்கணிக்கணித்து, வேறு மாநிலத்தில் தங்க வைத் தார்கள்.‘ரா’ உளவு நிறுவனத்தின் இந்த அடாவடி நடவடிக்கைகளில் அரசியல் நேர்மை ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்கிறோம்.
பின்னர் - தமிழ்நாடு சட்டமன்றத்தில் இது பற்றிய விவாதம் வந்தது. உளவு நிறுவனங்கள் இப்படி போட்டிக் குழுக்களை உருவாக்கி, சகோதர யுத்தங்களைத் தொடங்கி வைத்ததை காங்கிர°, அ.தி.மு.க., சி.பி.அய்., (எம்) கட்சிகள் கண்டிக்க முன்வரவில்லை.
முறைகேடாக கப்பல்களில் விமானங்களில் ஏற்றி இந்தியாவுக்கு உளவு நிறுவனங்கள் போட்டிக் குழுக்களைக் கொண்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. மாறாக தி.மு.க ஆட்சியில் விடுதலைப்புலிகள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்ற பார்ப்பன ஏடுகளின் குரலையே இவர்கள் எதிரொலித்தார்கள். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி -“‘ரா’ உளவு நிறுவனம் தான் இந்தக் குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கு மிடையே மோதலை உருவாக்குவதே ‘ரா’வின் நோக்கமாக இருக்கிறது.
எனவே இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழ்க் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களை உருவாக்கியதற்கு ‘ரா’ தான் காரணமாக இருந்தது. இப்போது அதே வேலையை மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே செய்து கொண்டிருக்கிறது”

"Sri Karunanithi, on 8th May 1990, on the floor of the Assembly is reported to have accused the Research and Analysis Wing (RAW) of trying to create a rift between the Centre and the State appealed to the Prime Minister to take appropirate action. He alleged that the RAW which was responsible in the past for creating divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State"
(ஆதாரம்: ஜெயின் ஆணைய அறிக்கை)-
என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவராலேயே சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்து இது! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்த அச்சப்படி அதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டில் பத்மநாபா படுகொலையும், சகோதர யுத்தங்களும் தொடர்ந்தன.உளவு நிறுவனங்களின் பார்ப்பன சதித் திட்டம் உருவானது. இதற்கு தளம் அமைத்துத் தந்தது ‘ரா’ உளவு நிறுவனம் தான்! உளவு நிறுவன மிரட்டலுக்கு தி.மு.க. பணிய மறுத்தது. உடனே ஜெயலலிதா, சுப்ரமணியசாமி, எம்.கே.நாராயணன் என்று உளவு நிறுவன பார்ப்பன சக்திகள் தீட்டிய திட்டத்தின்படி தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.
அதே உளவு நிறுவனம் தான் தமிழ்நாட்டில் மீண்டும் 2007-லும் தனது திருவிளையாடல்களைத் துவக்கி இருக்கிறது. உளவு நிறுவனங்களோடு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களை சந்தித்து, அவர்களின் சூழ்ச்சிப் பொறிகளைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ள தி.மு.க. ஆட்சி, பொய்மைப் பிரச்சாரத்துக்கு துணை போய்விடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்.

No comments: