Wednesday, April 22, 2009

சிறிலங்கா இராணுவம் தமிழ்மக்களை மிருக வெறி கொண்டு தாக்குகிறது; இதுபோன்று படுகொலை உலகில் எங்குமே நிகழ்ந்ததில்லை: ஜெயலலிதா

’இலங்கையில் பாதுகாப்பு வளையத்தில் சிக்கி இருக்கும் தமிழர்கள் அனைவரையும் இலங்கை இராணுவம் மிருக வெறி கொண்டு தாக்கி வருகிறது. தப்பி ஓடுபவர்களை எல்லாம் இலங்கை இராணுவம் விரட்டி அடித்துக் கொள்கிறது. என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது:-அங்கே தமிழ் இனமே அழிந்து கொண்டிருப்பதாக கவலை தரும் செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற இனப் படுகொலை உலகத்தில் எங்குமே நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதி தெளிவான முடிவை, தைரியமாக எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார்கள். பல நாடுகளில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால் கருணாநிதி உடனடி நடவடிக்கை எதையும் எடுக்காமல், நிமிடத்திற்கு ஒரு பேச்சு பேசிக் கொண்டிருக்கிறார். மீண்டும் மீண்டும் தந்தி கொடுப்பதுதான் கருணாநிதிக்கு தெரிந்த ஒரே தீர்வு போலும்.
இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் இந்த நிமிடத்தில் நமது ஒரே முழக்கம். அதற்கு அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். அதை இந்திய அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். அதற்கு தமிழக முதலமைச்சரின் பங்கு என்ன என்பதுதான் எல்லோரும் கேட்கும் கேள்வி. இந்த நேரத்திலாவது கருணாநிதி ஒரு முதலமைச்சராக செயல்பட்டு மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்களை காப்பாற்ற முன்வர வேண்டும். இல்லையெனில் வரலாறு எப்படி அவரை மன்னிக்கும்? ’’என ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: