Friday, May 1, 2009

கலைஞர் கருணாநிதியை அவமதித்த சோனியா

உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன்பு மூன்று நாட்களாக சோனியாவிடம் தொடர்பு கொண்டு கலைஞர் கருணாநிதி பேச முயன்றிருக்கிறார் - ஆனால் பேச முடியவில்லை. (இதை முதலமைச்சருடன் நெருக்கமாக உள்ள கி.வீரமணி கலைஞரே தம்மிடம் கூறியதாக கூறியிருக்கிறார்) உண்ணாவிரதத்தை தொடங்கிய பிறகாவது சோனியா தமிழகத்தின் மூத்த தலைவர் என்று மதித்து பேசினாரா? - இல்லை! ஒரே வாரத்தில் இரண்டு முறை சோனியாவுக்கு கலைஞர் கருணாநிதி தந்தி கொடுத்ததாக ‘முரசொலி’ கூறுகிறது.
இரண்டு முறை தந்தி கொடுத்த பிறகும், சோனியா இப்பிரச்சினையில் மனமிறங்கி, முதலமைச்சரிடம் பேச வந்தாரா? - இல்லை! தமிழருக்கு எதிரான போரை நிறுத்துவதில் இரும்புச் சுவர்போல் வளையாது இருக்கும் சோனியா, தமிழகத்தின் முதல்வர் கலைஞர் கருணாநிதியையும் மதிக்கத் தயாராக இல்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் சோனியாவை எதிர்த்துப் பேசு வோரை காவல்துறை அடக்கியது. சோனியா கொடும்பாவியை எரித்து எதிர்ப்புக் காட்டியோரை - அடக்குமுறை சட்டங்களை ஏவி, தனது சோனியா பக்தியை வெளிப் படுத்தினார் கலைஞர் கருணாநிதி, நாட்டின் எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சோனியாவை, நாட்டின் அதிபராகவே கருதி செயல்பட்டார் கலைஞர் கருணாநிதி.
சொக்கத் தங்கம் என்றார்; ஈழத் தமிழர் பிரச்சினையில் தமது கருத்தும், சோனியாவின் கருத்தும் ஒன்று தான். ஒரு சிறு வேறுபாடுகூட கிடையாது என்று கூறி பூரித்தார். இந்த உணர்வுகளை சோனியா மதித்தாரா? தமிழ் நாட்டைச் சார்ந்த உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான், முதல்வரிடம் உறுதி தந்திருக்கிறார்; பிரதமர் மன்மோகன் சிங் கூட உறுதி கூறி, போராட்டத்தை முடிக்க, முன் வரவில்லை; சோனி யாவோ பேசவும் முயற்சிக்க வில்லை.
சோனியாவின் துரோகங் களை திரையிட்டு மறைத்துக் கொண்டு - அவரைக் காப்பாற்ற முயன்று - தனக்கும் அவப்பெயரை தேடிக் கொண்டிருக்கும் கலைஞர் கருணாநிதிக்கு சோனியா தரும் மதிப்பு இது தானோ? தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்களே! இவ்வளவு அவமதிப்புகளையும் சுமந்து கொண்டு காங்கிரசுக்கு நீங்கள் வாக்களிக்கத்தான் போகிறீர்களா?

No comments: