Saturday, May 9, 2009

இலங்கை தமிழர் நிலைமையை ஆய்வு செய்ய மனித உரிமை கவுன்சிலுக்கு ஐ.நா. உத்தரவு

இலங்கையில் பரிதவிக்கும் அப்பாவி தமிழர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய உடனடியாக சர்வதேச விசாரணை கமிட்டி அமைக்குமாறு மனித உரிமை கவுன்சிலுக்கு ஐ.நா. வல்லுனர் குழு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் கடுமையாக போர் நடந்து வருகிறது. விடுதலைப்புலிகளின் வசம் இருந்த ஏராளமான பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டது. அந்த பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை நிவாரண முகாம்களில் இலங்கை அரசு தங்க வைத்துள்ளது. அவர்களுக்கு போதுமான உணவு வழங்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளிடம் எஞ்சியுள்ள 4 சதுர கி.மீ. பரப்பளவில் இன்னும் 50 ஆயிரம் மக்கள் இருப்பதாக ஐ.நா. மதிப்பிட்டு இருக்கிறது. அந்த பகுதியிலும் ராணுவம் தீவிரமாக குண்டுகளை வீசி வருகிறது. இதனால், இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருடைய நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது.

இலங்கை தமிழர்களின் உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட மேலை நாடுகளும் ஐ.நா.சபையின் பல்வேறு உறுப்புகளும் வருத்தம் அடைந்துள்ளன. இந்த சூழ்நிலையில், இலங்கை தமிழர்களின் நிலைமை குறித்து ஆராய சர்வதேச விசாரணை கமிட்டி அமைக்குமாறு மனித உரிமைகள் கவுன்சிலுக்கு ஐ.நா. வல்லுனர்கள் குழு அறிவுறுத்தி இருக்கிறது.

இது குறித்து ஐ.நா. சபையின் உடல் நல உரிமைகள் கவுன்சில் தலைவர் பிலிப் ஆல்ஸ்டன், உணவுகள் உரிமை தலைவர் ஆனந்த் குரோவர், குடிநீர் உரிமை தலைவர் ஆலிவர், அடிப்படை சுகாதார உரிமைகள் கேதரின் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித துன்புறுத்தல்கள் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்க கூடியவையாக உள்ளன. இவ்வளவு மக்கள் பலியாகி விட்டனர் என்று கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு படுகொலை தொடருகிறது. பொறுப்புணர்ச்சியும், வெளிப்படையான தன்மையும் இல்லாததால் உண்மை நிலவரம் தெரியவில்லை.

கடந்த 3 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு நம்பும்படியான சரியான காரணம் எதுவும் கிடையாது. போர் பகுதிக்குள் சர்வதேச கண்காணிப்பு குழு மற்றும் பத்திரிகையாளர்களை இதுவரை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது.

எனவே, கடந்த சில மாதங்களாக நடந்த சம்பவங்கள் குறித்த ஆதாரங்களை திரட்டவும், தற்போது நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் உடனடியாக ஒரு சர்வதேச கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை கவுன்சிலை கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

No comments: