Friday, May 15, 2009

ஜெ.வுக்கு தற்காலிகமாகவே ஆதரவு தருகிறோம் - கொளத்தூர் மணி

தனி ஈழம் தொடர்பான ஜெயலலிதாவின் நிலைப்பாடு நடிப்பு என்றாலும் கூட, அந்த நடிப்புக்காக கூட கருணாநிதி தனி ஈழம் என்று சொல்லவில்லையே. ஜெயலலிதாவை இந்த விவகாரத்தில் தற்காலிகமாகவே ஆதரிக்கிறோம் என பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

ஆனந்த விகடன் இதழுக்கு இதுதொடர்பாக பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அளித்துள்ள பேட்டி..

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது.ஆதரவாகச் செயல்படுவதுதான் குற்றம் என்று முன்பு வைகோ, நெடுமாறன் ஆகியோர் பொடாவில் கைது செய்யப்பட்டபோதே உச்சநீதிமன்றம் தெளிவாகத் தன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால், மறுபடியும் மறுபடியும் வெறும் பேச்சுக்காகக் கைது செய்யப்படுகிறோம்.வைகோவின் பொடா வழக்கு விடுதலைக்காகத் தீவிரமாகக் குரல் கொடுத்த, செயலாற்றிய அதே கலைஞர்தான் இப்போது மூன்று பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறார்.


ஒரே சட்டத்தை ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியாக மாறினால் வேறு மாதிரியும் கையாள்கிறார் கலைஞர்!நாங்கள் தேர்தலில் பங்கேற்பது இல்லை. ஆனால், அரசியலைப் புறந்தள்ள முடியாது. நீங்கள் சொல்வது மாதிரி அது காங்கிரசுக்கு எதிரான சிடி என்பதைவிட ஈழத் தமிழனுக்கு ஆதரவான சிடி. ஒரு திட்டமிட்ட இன அழித்தொழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்படுகிறது. சிங்கள இராணுவம் தமிழர்களை விதவிதமான குண்டுகளால் கொலை செய்கிறது. பட்டினி போடுகிறது. கொட்டாங்குச்சிகளைக் கையில் ஏந்திய படி ஒரு கவளம் சோற்றுக்காகவும், ஒரு குவளைத் தண்ணீருக்காகவும் தமிழர்கள் கையேந்தி முண்டியடிக்கிறார்கள்.


இந்த உண்மைகளை எடுத்துச் சொல்வதில் என்ன பிழை? அதுவும் நாங்கள் தயாரித்திருந்த சிடி-யில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காட்சிகளைத்தான் தொகுத்திருந்தோம். அதையே கூடாது என்கிறார்கள்.ஒரு கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்வது எப்படி ஜனநாயக உரிமையோ, அதுபோல இன்ன கட்சிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று சொல்வதும் ஜனநாயக உரிமைதான். ஆனால், கலைஞர் அரசு இந்த ஜனநாயகத்தை அடியோடு மறுக்கிறது.கோவைச் சம்பவத்தைத் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது. அது ஒட்டுமொத்த தமிழர் கொந்தளிப்பின் ஒரு துளி வெளிப்பாடு.


உண்மையில், கோவையில் அன்று எங்கள் இயக்கத் தோழர்களின் எண்ணிக்கை 30 பேரோ, 40 பேரோதான்.விஷயத்தைக் கேள்விப்பட்டு சாலையில் நின்றிருந்தவர்களும், பேருந்துகளில் அமர்ந்திருந்தவர்களும், கிராமத்து மக்களும் தோழர்களுடன் இணைந்துகொண்டனர். அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் இந்திய அரசாங்கத்தின் மீது தமிழர்களுக்குக் கோபம் இருக்கிறது.தேர்தல் அரசியல் வழியாக அமைகிற எந்த அரசும் உழைக்கும் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தித் தராது என்று நாங்கள் தெளிவாக நம்புகிறோம். ஆனால், நடப்பில் தேர்தல் அரசியல் என்ற சீரழிந்த வடிவம் மட்டும்தான் நம்மிடம் இருக்கிறது. இதில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. ஒப்பீட்டு அளவில் குறைந்த கேடுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும்.


ஈழப் பிரச்னையில் கருணாநிதி யை விடக் குறைந்த கேடுள்ளவராக ஜெயலலிதாவை நினைக்கிறோம். ஜெயலலிதா நடிப்புக்காகத்தான் தனி ஈழம் அமைப்பேன் என்று சொல்கிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அதே நடிப்புக்காகக்கூட கருணாநிதி அந்த வார்த்தையை உச்சரிக்கத் தயாராக இல்லையே! எனவேதான், நாங்கள் ஒரு தற்காலிக நிலைப்பாடாக ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம். செயல் உத்தியை மட்டுமே மாற்றிக்கொண்டு இருக்கிறோம். போர் உத்தி அப்படியேதான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

No comments: